ஓபிஎஸ் இல்லத்திற்கு சென்ற முதலமைச்சர்.. முழக்கமிட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.!

ops

முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தின் தாயார் பழனியம்மாள், கடந்த மாதம் 24-ம் தேதி தேனியில் காலமானார். அவரது தாயாரின் மறைவிற்கு பிரபலங்களும் அரசியல் கட்சி தலைவர்களும் நேரிலும் சமூக வலைதளங்களிலும் தங்களின் இரங்கல்களை தெரிவித்தனர். அந்த வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளத்தில் தனது இரங்கலை தெரிவித்திருந்தார்.

முதலமைச்சர் ஆறுதல்

இதையடுத்து,  இன்று காலை சென்னை பசுமை வழி சாலையில் உள்ள ஓ. பன்னீர்செல்வத்தின் இல்லத்திற்கு நேரில் சென்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  ஆறுதல் கூறினார். முதலமைச்சருடன் அமைச்சர்கள் சேகர் பாபு, உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன், முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

ஓபிஎஸ் ஆதரவாளர்கள் முழக்கம்

ஓ.பன்னீர்செல்வம் அவர்களை சந்தித்த பின், முதலமைச்சர் புறப்பட்டு செல்லும் போது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கொடநாடு வழக்கை விசாரிக்க வேண்டும் என்று முழக்கமிட்டனர். மேலும், எடப்பாடி பழனிசாமியை கைது செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் முறையிட்டனர்.