நிலக்கரி சுரங்கத்திற்கு அனுமதி கிடையாது. நானும் டெல்டாகாரன் தான் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

cmc mkstalin

டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி எடுக்கும் விவகாரம் தொடர்பாக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. 

கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானம் 

நிலக்கரி சுரங்க விவகாரம் தொடர்பாக சட்டசபையில் தி.மு.க., காங்கிரஸ், அ.தி.மு.க., பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. நிலக்கரி எடுப்பது குறித்து மத்திய அரசு ஆய்வு மேற்கொள்ள உள்ளதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் கூறினார்.

டி.ஆர்.பி.ராஜா கண்டனம்

நிலக்கரி அமைச்சகம் தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளதாகவும்,  நிலக்கரி சுரங்கம் டெல்டா மக்களின் வாழ்வாதாரத்தை ஏலம் விடும் செயல் என்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்திருந்தார்.  

எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ்

இதனைத்தொடர்ந்து பேசிய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை, நிலக்கரி சுரங்கம் அமைக்கும் டெண்டரை உடனடியாக நிறுத்த மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும், மத்திய அரசின் திட்டங்கள் மாநில அரசுக்கு எதிராக உள்ளது என்றும்,  மாநில அரசை கலந்து ஆலோசிக்காமல் திட்டத்தை மேற்கொள்வது கண்டனத்துக்குரியது என்றும் எதிர்ப்பு தெரிவித்தார்.  

முதலமைச்சரின் பதில் 

இந்த தீர்மானத்திற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 
"புதிய நிலக்கரி சுரங்க விவகாரத்தை பற்றி அறிந்தவுடன் நான் அதிர்ச்சிக்குள்ளானேன். இது தொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதினேன். எனது கடிதத்திற்கு நிச்சயம் நடவடிக்கை எடுப்போம் என ஒன்றிய அமைச்சர் டி.ஆர். பாலுவிடம் தெரிவித்துள்ளார்.

நிலக்கரி சுரங்கத்திற்கு அனுமதி கிடையாது

புதிய நிலக்கரி சுரங்க விவகாரத்தில் தமிழக அரசின் கருத்தை கேட்காமல் மத்திய அரசு தன்னிச்சையாக முடிவெடுத்தது. நானும் டெல்டா மாவட்ட பகுதியை சேர்ந்தவந்தான். எந்த காரணத்தை கொண்டும் நிலக்கரி சுரங்கம் அமைக்க அனுமதி அளிக்கப்பட மாட்டாது. நிச்சயம் உறுதியாக இருப்பேன். மத்திய அரசின் நிலக்கரி சுரங்கங்களுக்கு எக்காரணம் கொண்டும் தமிழ்நாடு அனுமதி அளிக்காது, அளிக்காது" என்று கூறினார்.