கால்பந்து ஜாம்பவான் பீலே மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

cm mk stalin condolence of pele

உலகின் முதல் கால்பந்து சூப்பர் ஸ்டாராக அனைவராலும் கொண்டாடப்படும் பிரேசிலின் கால்பந்து ஜாம்பவான் பீலே உடல்நலக் குறைவால் காலமனார். சமீப நாட்களாக அவரது உடல்நலம் பலவீனமடைந்து இருந்ததை யடுத்து, பிரேசிலின் சாவ் பொல்ஹொ பகுதியில் உள்ள மருத்துவமனையில் கடந்த மாதம் இறுதியில் பீலே அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் இதயம் மற்றும் சிறுநீரகம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி கால்பந்து ஜாம்பவான் பீலே உயிரிழந்ததாக அவரது மகள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

பீலே மறைவுக்கு உலகெங்கும் உள்ள கால்பந்து ரசிகர்கள், தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கால்பந்து ஜாம்பவான் பீலே மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "பீலே கால்பந்தாட்டத்தின் மன்னன் மட்டுமல்ல, லட்சக்கணக்கான மக்களை ஊக்கப்படுத்திய 20 ஆம் நூற்றாண்டின் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவராக பீலே சந்தேகத்திற்கு இடமின்றி இருப்பார். பிளக் பியர்ல் (BlackPearl) எப்போதும் எல்லா வகையிலும் விளையாட்டின் சின்னமாக இருக்கும். என்றும் மறக்கமுடியாத பாரம்பரியத்தை பீலே நம்மிடையே விட்டுச் செல்கிறார்" என்று பதிவிட்டுள்ளார். அதேபோல, ரொனால்டோ, எம்பாப்பே, உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு நட்சத்திரங்களும் உலகில் உள்ள அவரது ரசிகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.