சந்திரசேகர ராவ் இருக்கும் கூட்டணியில் காங்கிரஸ் சேராது.. ராகுல் காந்தி திட்டவட்டம்.!

cgthdf

தெலுங்கானா மாநிலத்தின் சந்திரசேகர ராவின் கட்சி, பாஜகவின் 'பீ' டீமாகத் தான் உள்ளதால், அவர் இருக்கும் கூட்டணியில் காங்கிரஸ் சேராது என ராகுல் காந்தி திட்டவட்டமாக கூறியுள்ளார்.  

தெலுங்கானாவில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ் கட்சி தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது. இந்தநிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று ஜூலை 2-ம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தெலுங்கானாவில் உள்ள கம்மம் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்றினார். 

'பீ' டீமாக  உள்ளது

அப்போது தெலுங்கானாவை ஆளும் பாரதிய ராஷ்டிர சமிதி அரசையும், முதலமைச்சர் சந்திரசேகர் ராவையும் கடுமையாக விமர்சித்து பேசினார். "'பாரதிய ராஷ்டிர சமிதி' என்பது 'பா.ஜனதா உறவினர் சமிதி' போலத்தான். சந்திரசேகர ராவ் தன்னை ஒரு பேரரசராகவும், தெலுங்கானாவை தனது பேரரசாகவும் நினைத்துக் கொள்கிறார். நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி எப்போதும் பாஜகவுக்கு எதிராகத்தான் நின்று இருக்கிறது. ஆனால், சந்திரசேகர ராவின் கட்சி, பாஜகவின் 'பீ' டீமாகத் தான் உள்ளது. 

பாரதிய ராஷ்டிர சமிதி இருக்கும் கூட்டணியில் காங்கிரஸ் சேராது

சந்திரசேகர ராவ் மற்றும் அவரது கட்சித் தலைவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் அவர்களை பாஜகவிற்கு அடிபணியச் செய்துள்ளது. சந்திரசேகர ராவின் ரிமோட் கண்ட்ரோல், பிரதமர் மோடியிடம் இருக்கிறது. சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரதிய ராஷ்டிர சமிதி இருக்கும் கூட்டணியில் காங்கிரஸ் சேராது. இதை பிற எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கூறிவிட்டேன். 

கர்நாடகாவில் நடந்தது இங்கேயும் நடக்கும்

காங்கிரஸ் கட்சி சமீபத்தில் கர்நாடகாவில் ஊழல் மற்றும் ஏழை விரோத அரசுக்கு எதிராக வெற்றி பெற்றது. ஏழைகள், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர், சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் ஆதரவுடன் நாங்கள் அவர்களை தோற்கடித்தோம். இது தெலுங்கானாவில் நடைபெறும். மாநிலத்தின் பெறும் பணக்காரர்கள், அதிகாரம் மிக்கவர்கள் ஒருபுறம் இருக்கின்றனர். மறுபுறம் ஏழைகள், பழங்குடியினர், சிறுபான்மையினர், விவசாயிகள் மற்றும் சிறு வனிகர்கள் எங்களுடன் இருக்கின்றனர். கர்நாடகாவில் நடந்தது இங்கேயும் நடக்கும்" என்று பேசினார்.