திருப்பூரில் வெறிச்செயல்.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சரமாரி வெட்டிக் கொலை.. ஊர் மக்கள் போராட்டம்.!

Crime T

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இரு தரப்பினர் இடையே வாக்குவாதம்

திருப்பூர் மாவட்டம்-  பல்லடம் அருகே கள்ளக்கிணறு பகுதியில் தாய், மனைவி மற்றும் மகனுடன் வசித்து வருபவர் மோகன்ராஜ். இந்நிலையில் நேற்றிரவு சிலர், மோகன்ராஜீன் வீட்டு அருகே உள்ள விவசாய நிலத்தில் அமர்ந்து  மது அருந்தி உள்ளனர். இதனையடுத்து சம்பவ இடம் சென்ற மோகன்ராஜ் எதற்காக எங்களது வீட்டிற்கு அருகே அமர்ந்து மது அருந்துகிறீர்கள் என அவர்களிடம்  கேட்டுள்ளார். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது .

சரமாரி தாக்குதல்

இதனைத்தொடர்ந்து, அங்கிருந்து கிளம்பி சென்ற மர்மநபர்கள் மீண்டும் மாலை மோகன்ராஜின் வீட்டிற்கு வந்துள்ளனர். வீட்டில் இருந்த மோகன்ராஜை வெளியே அழைத்து, இது தொடர்பாக மீண்டும் வாக்குவாதம் செய்துள்ளனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் மர்மநபர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மோகன்ராஜை சரமாரியமாக வெட்டியுள்ளனர். அவரது அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்த, மோகன்ராஜின் தாயார் புஷ்பவதி, சித்தி ரத்தினம்மாள், சகோதரர் செந்தில்குமார் ஆகியோரை கொடூரமாக வெட்டிய மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி சென்றனர். கொடூரமாக வெட்டப்பட்ட அனைவரும் உயிரிழந்தனர். 

பாஜகவினர் சாலை மறியல்

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் போலீசார் உடல்களை கைப்பற்றி பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கோவை மேற்கு மண்டல ஐ.ஜி பவானீஸ்வரி, திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன் ஆகியோர் சம்பவ இடத்தில் வந்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், செந்தில்குமாரிடம் பணி புரிந்த ஓட்டுநர் வெங்கடேஷ் தனது நண்பர்களுடன் இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிய வந்துள்ளது. வெங்கடேஷ் கோழி கடை வைத்திருந்த போது, மோகன்ராஜ் வைத்திருந்த ரெஸ்டாரண்ட்டுக்கு கறி வாங்கியதில் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை இருந்ததாகவும், இது தொடர்பான வாக்குவாதம் முற்றி இந்த படுகொலைகள் நடந்ததாகவும் தெரிகிறது.இந்நிலையில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி அரசு மருத்துவமனை முன்பு இறந்தவர்களின் உறவினர்கள், பாஜகவினர் இன்று  சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தேடுதல் வேட்டை 

மேலும், தற்போது கொலையான நால்வரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கும், சம்பவம் நடந்த இடத்திலும்  ஐந்திற்கும் மேற்பட்ட மாவட்ட எஸ்.பி.க்கள் உள்ளிட்ட 700 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்துபோன மோகன்ராஜ் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி என்பதால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இச்சம்பவம் தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைதளம் வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த செல்லமுத்து என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். வெங்கடேஷ் மற்றும் சோனைமுத்து ஆகியோரை போலீசார் தேடி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

திமுக ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பில்லை

இந்த கொலை சம்பவத்தில் குடும்பத்தையே காலி செய்த நபர்களை கைது செய்த பின்னர் தான் உடல்களை பெறுவோம் என்று மோகன்ராஜின் உறவினர் செல்வகுமார் தெரிவித்து உள்ளார். இந்த நிலையில், திமுக அரசின் மதுக்கடைகள் தான் இது போன்ற கொலை சம்பவங்களுக்கு காரணம் என்று பல்லடம் எம்.எல்.ஏ. எம்.எஸ்.எம்.ஆனந்தன் தெரிவித்துள்ளார். கொலை குற்றத்தில் ஈடுபட்ட கொலையாளிகளை பிடிக்க திமுக அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பில்லை. திமுக அரசு மக்களுக்கு துப்பாக்கி வைத்துக் கொள்ள லைசன்ஸ் வழங்கினால் பாஜக இலவசமாக துப்பாக்கி வழங்கும் என்று தெரிவித்தார்.