தமிழ்நாட்டில் ஆவின்பால் நிறுவனம் மூலம் குடிநீர் பாட்டில் விற்பனை செய்யும் திட்டத்திற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
குடிநீரை இலவசமாக வழங்க வேண்டியது அரசின் கடமை
வரியும் பெற்றுக் கொண்டு இலவசமாக தர வேண்டிய குடிநீரை வியாபாரம் செய்வது கண்டிக்கத்தக்கது. தமிழகம் முழுவதும் ஆவின் குடிநீர் பாட்டில்கள் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டு, ஒப்பந்தப் புள்ளி வெளியிடப்பட்டுள்ளது. ஆவினின் அனைத்து விற்பனை நிலையங்கள் மூலம் குடிநீர் விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட குடிநீரை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டியது அரசின் கடமை. அவ்வாறு செய்யாமல் குடிநீரை பாட்டிலில், அடைத்து வைத்து விற்பனை செய்ய திட்டமிட்டிருப்பது எந்த வகையில் நியாயம்.
கொஞ்சமும் கவலைப்படாத தமிழக அரசு
குடிநீருக்காக பொதுமக்கள் வரி செலுத்தி வரும் நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் பிரச்சனை இருந்து வருகிறது. குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து காலி குடங்களுடன் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதைப்பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலைப்படாமல் தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. என விஜயகாந்த அந்த அறிக்கையில், கண்டனம் தெரிவித்திருந்தார்.