ஒப்புதல் இல்லாமல் Like, Share செய்ய கூடாது.. விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு புஸ்ஸி ஆனந்த் வலியுறுத்தல்.! 

vmi

விஜய் மக்கள் இயக்கத்தின் செயல்பாடு

விஜய் மக்கள் இயக்கம் பற்றியான பேச்சுக்கள், அவர்களின் செயல்பாடுகள், முன்னெடுப்புகள் என தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாகவே அதிகம் பேசப்பட்டு வருகின்றன. இதெல்லாம் நடிகர் விஜயின் அரசியல் பிரவேசத்திற்கு போடும் அச்சாரம் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்து வந்தனர். அதன்படி, நடிகர் விஜய் மக்கள் இயக்கம் மூலம் ரத்ததானம், கல்வி உதவி, தலைவர்களை கெளரவித்தல், அன்னதானம் வழங்குதல், மாணவர்களை கெளரவித்தல் உள்ளிட்ட செயல்பாடுகளை செய்து வருகிறது விஜய் மக்கள் இயக்கம். 

ஐடி பிரிவு ஆலோசனைக் கூட்டம்

அந்தவகையில், இன்று ஆக-26 விஜய் மக்கள் இயக்கத்தின் ஐடி பிரிவு ஆலோசனைக் கூட்டம் சென்னையில் உள்ள பனையூரில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் ஒரு தொகுதிக்கு 6 பேர் என அனைத்து தொகுதிகளிலிருந்தும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆலோசனைக்கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாக விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார்.   

ஐடி பிரிவில் 3 லட்சம் பேர்

அப்போது பேசிய அவர், "தளபதியின் சொல்லுக்கிணங்க தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசனைக் கூட்டம் இன்று கூட்டப்பட்டிருக்கிறது. அவர்களுடன் கலந்து ஆலோசித்து எவ்வாறு இந்த அணி செயல்பட வேண்டும் என்று பேசப்படுகிறது. வாட்ஸ் ஆப் குழுக்கள் உள்ளிட்ட எல்லா தளத்திலும் விஜய் மக்கள் இயக்கம் செயல்பட்டு இயங்கிக் கொண்டிருக்கிறது. தகவல் தொழில்நுட்ப அணியில் சுமார் 3 லட்சம் பேர் இருந்து செயல்படுகின்றனர். அவர்களுடன் ஆலோசித்து எப்படி செயல்பட வேண்டும் என்பதை எடுத்துரைத்து அதற்கேற்ப இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது" என்று பேசினார். 

விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு புஸ்ஸி ஆனந்த் வலியுறுத்தல்

அதன்பிறகு, புஸ்ஸி ஆனந்த் கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு ஒருசில அறிவுரைகளை வழங்கினார். அதில், இயக்கத்தின் ஒப்புதல் இல்லாமல் மற்றவர்களின் பதிவுகளை Like, Share செய்ய கூடாது. எந்த வகையிலும் தனி நபர் தாக்குதல் இருக்க கூடாது. மொழி, இனம், சாதி, மதம் என்ற வட்டத்துக்குள் சிக்கிக்கொள்ளாமல், நல்லிணக்கப்பாதையில் பயணிப்பதில் உறுதியாக இருக்க வேண்டும். 

சமூக ஊடகங்களில் அரசியல் சமூக தலைவர்கள், திரைத்துறை சார்ந்த கலைஞர்கள் குறித்து கருத்து பரிமாற்றம் மற்றும் தர்க்கங்கள் நாகரீகத்துடனும், ஆதாரங்கள் அடிப்படையிலும், கருத்தியலாகவும், கண்ணியமான வார்த்தைகளும் பயன்படுத்தி இருக்க வேண்டும் என்று விஜய் மக்கள் இயக்க ஐடி பிரிவு ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வலியுறுத்தியுள்ளார். 


---