வட மாநிலங்களை அதிர வைத்த நிலநடுக்கம்.. வீதியில் தஞ்சமடைந்த மக்கள்.!

ear

வட மாநிலங்களில் பல பகுதியில் நேற்றிரவு நிலநடுக்கம் உணரப்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். 

டெல்லி, உத்தரப்பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் உள்பட பல வடமாநிலங்களில் நேற்று இரவு திடீரென்று நிலஅதிர்வு ஏற்பட்டது. கட்டிடங்கள் குலுங்கி பொருட்கள் கீழே உருண்டு விழுந்ததால் மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்து வெட்டவெளியில் தஞ்சமடைந்தனர். 

பீதியில் மக்கள்

ஆப்கானிஸ்தானிலுள்ள இந்துகுஷ் மலைப்பகுதியை மையமாக வைத்து ரிக்டர் அளவுகோலில் 6.6-ஆக பதிவானதாக இந்திய நில அதிர்வு மையம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. பைசாபாத் நகரின் தெற்கு மற்றும் தென்கிழக்கில் 156 கிலோமீட்டர் தொலைவிலும், 184 கிலோமீட்டர் ஆழத்திலும் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் உணரப்பட்டது. குறிப்பாக வடமாநிலங்களில் இரவு நிலநடுக்கம் உணரப்பட்டது.  அதன்படி டெல்லியில் இரவு சுமார் 10 மணியளவில் 3 வினாடிகள் வரை திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  கட்டிடங்கள் குலுங்கி பொருட்கள் உருண்டு விழுந்ததால் மக்கள் பீதியடைந்தனர். 

பிற நாடுகளிலும் நிலநடுக்கம்

துர்க்மெனிஸ்தான், கஜகஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், சீனா, ஆப்கானிஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படும் நிலையில் இந்தியாவிலும் பல மாநிலங்களில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. குறிப்பாக வடமாநிலங்களில் நேற்று இரவு நிலநடுக்கம் உணரப்பட்டது.

வீதியில் தஞ்சம்

இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் நொய்டா, காசியாபாத் பகுதியில் நிலஅதிர்வு ஏற்பட்டது.  இதனால் அந்த பகுதி மக்களும் வீடுகளை விட்டு வெளியேறி வெட்டவெளியில் தஞ்சமடைந்தனர்.  இதுதவிர பஞ்சாப், ஹரியானா, காஷ்மீர் ஆகிய மாநிலங்களின் சில இடங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள மக்களும் வீடுகளை விட்டு வெளியேறி பொதுவெளியில் தஞ்சமடைந்தனர்.