இன்று மதுரையில் நடைபெற்ற முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாடு செய்த 51 ஜோடி திருமண விழாவில், எடப்பாடி பழனிச்சாமி நடிகர் வடிவேலு பாணியில் ஊடகங்களிடம் கோரிக்கை வைத்த சம்பவம் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுக்குழு வழக்கு
அதிமுக பொதுக்குழு தொடர்பாக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும், எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர்களாக இருந்த ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் போன்றோரை நீக்கியது செல்லும் எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
திருமண விழாவில் எடப்பாடி பழனிச்சாமி
இந்நிலையில் இன்று காலை மதுரையில், ஆர்.பி.உதயகுமாரின் மகள் திருமண நிகழ்வில் கலந்துகொண்ட பழனிச்சாமி மணமக்களை வாழ்த்தி பேசினார். அப்போது, ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆரின் ஆசியால் நமக்கு சாதகமான தீர்ப்பு வந்துள்ளதாக தெரிவித்த பழனிசாமி, இனிமேலாவது ஊடக நண்பர்கள் மூன்றாக பிரிந்துவிட்டது, நான்காக பிரிந்துவிட்டது என விவாதம் செய்யாமல், அதிமுக ஒன்றாக இருக்கிறது என்ற வார்த்தையை பயன்படுத்துங்கள் எனக்கூறினார். கடந்த 7 மாத காலம் எங்கள் கட்சியை வைத்தே ஊடகத்தையும், பத்திரிகையையும் நடத்திவிட்டீர்கள். போதும் இதோடு நிறுத்திக்கொள்ளுங்கள், இதற்கு மேல் வேண்டாம், எங்களால் உங்களுக்கு வருமானம் கிடைத்தது எங்களுக்கு மகிழ்ச்சி. இனியாவது நாட்டு மக்களுக்கு நல்லது செய்யும் இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட இயக்கம் என பத்திரிகைகள், ஊடகங்கள் வாயிலாக நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்துங்கள். மக்களுக்காக உழைக்கும் எங்கள் கட்சிக்கு நீங்கள் துணை நிற்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.