இறுதிகட்ட பரப்புரை

இன்றுடன் ஓய்கிறது ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் பரப்புரை..

erd 1

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பரப்புரை, இன்று 25-ம் தேதி மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. ஈரோட்டில் முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி ஆகியோர் இறுதிகட்ட பரப்புரையை மேற்கொள்கின்றனர்.

காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி. உள்ளிட்டோரும், காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், திருநாவுக்கரசர் உள்ளிட்டோரும் பரப்புரை மேற்கொண்டனர். 

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி தனது முதல்கட்ட பரப்புரையை நிறைவு செய்துள்ள நிலையில், இரண்டாம் கட்ட பரப்புரையை நேற்று தொடர்ந்த அவர், இன்று மதியம் பெரியார் நகரில் பரப்புரையை நிறைவு செய்ய உள்ளார்.

அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பாஜக தலைவர் அண்ணாமலை, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் பரப்புரை மேற்கொண்டனர். தேமுதிக வேட்பாளரை ஆதரித்து பிரேமலதா, சுதீஷ், விஜய பிரபாகரன் ஆகியோரும், நாம் தமிழர் வேட்பாளரை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் பரப்புரை செய்கின்றனர்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் பிப்-24, 25-ம் தேதிகளில் பரப்புரை செய்ய உள்ளதாக முதலில் அறிவிப்பு வெளியானது. இந்த பரப்புரை, இன்று 25-ம் தேதி ஒரு நாளாக குறைக்கப்பட்டது. ஈரோட்டில் இன்று பரப்புரை செய்ய உள்ள முதல்வர், நேற்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்து, அங்கிருந்து கார் மூலம் ஈரோடு வந்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பரப்புரை வாகனம் மூலம் முதல்வர் ஸ்டாலின் பரப்புரையை மேற்கொள்கிறார். தொடர்ந்து காந்தி சிலை, பெரிய அக்ரஹாரம் ஆகிய பகுதிகளில் பரப்புரை செய்கிறார். ஓய்வுக்கு பிறகு, மாலை 3 மணிக்கு முனிசிபல் காலனியில் பேசிவிட்டு,பெரியார் நகரில் பரப்புரையை நிறைவு செய்கிறார்.