அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான ரூ.42 கோடி சொத்துக்கள் முடக்கம் - அமலாக்கத்துறை

minister ponmudi

பொன்முடி வீட்டில் சோதனை

தமிழ்நாட்டில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்து வரும் பொன்முடி மற்றும் அவரது மகனும் எம்.பியுமான கவுதமசிகாமணி ஆகியோரின் வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 13 மணி நேர சோதனைக்கு பிறகு அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் பொன்முடியை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.  இந்த சம்பவம் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தகவலை வெளியிட்டுள்ள அமலாக்கத்துறை

அதிகாலை 3 மணி வரை விசாரணை நடைபெற்ற நிலையில் அவரை மீண்டும் இன்று மாலை ஆஜராக அமலாக்கத்துறையினர் கூறிய நிலையில் பொன்முடி மற்றும் கௌதம சிகாமணி இருவரும் ஆவணங்களுடன் 2வது நாளாக விசாரணைக்கு ஆஜராகினர். இதனிடையே பொன்முடி வீட்டில் சோதனை நடைபெற்றது குறித்த தகவல்களை அமலாக்கத்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். 

பல லட்ச ரூபாய் பணம் முடக்கம்

அதில், அமைச்சர் பொன்முடிக்கு தொடர்பான 7 இடங்களில் சோதனை நடத்தியதாகவும் அதில் சந்தேகத்திற்கு இடமான  ஆவணங்கள், வெளிநாட்டு பணம் ரூ.13 லட்சம் (தோராயமாக), கணக்கில் வராத ரூ.81.7 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்படுள்ளது. மேலும் ரூ.41.9 கோடி மதிப்புள்ள வைப்பு நிதி முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் மோசடி?

அதேபோல், பொன்முடி, அவரது மகன், உறவினர்கள், மற்றும் பினாமிகளின் பெயர்களில் 5 இடங்களில் சட்டவிரோதமாக மண் குவாரிகள் உள்ளதாகவும் கூறியுள்ள அமலாக்கத்துறை, ரூ.13 லட்சம் வெளிநாட்டு பணம் குறித்து முறையான விளக்கம் அளிக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளது. அதேபோல், இந்தோனேஷியாவில் உள்ள நிறுவனத்தை ரூ.41.5 லட்சத்துக்கு வாங்கி அதை ரூ.100 கோடிக்கு விற்பனை செய்ததாகவும், இந்தோனேஷீயா, ஐக்கிய அமீரகத்தில் உள்ள நிறுவனங்கள் மூலமாக மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது. இதனையடுத்து அமைச்சர் பொன்முடிம் மற்றும் அவரது மகன், கவுதம சிகாமணி ஆகியோரிடம் அமலாக்கத்துறையினர் தொடந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.