குலாம் நபி ஆசாத் மோடியின் தீவிர விசுவாசியாகி வருகிறார். - ஜெய்ராம் ரமேஷ்

jeyram ramesh

குலாம் நபி ஆசாத் கடந்து போகும் ஒவ்வொரு நாளிலும் பிரதமர் மோடியின் தீவிர விசுவாசியாகி வருகிறார் என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்து உள்ளார். 

வெளியேறிய முக்கிய தலைவர்கள்

காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய 5 தலைவர்களின் பெயர்களை அதானி பெயருடன் இணைத்து அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் டுவிட்டரில் பதிவிட்டார். அதில், அதானியின் ஆங்கில பெயரில் ஒவ்வொரு எழுத்துடனும், காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய முன்னாள் தலைவர்களான குலாம் நபி ஆசாத், ஜோதிர்ஆதித்ய சிந்தியா, கிரண் குமார் ரெட்டி, ஹிமந்த பிஸ்வா சர்மா மற்றும் அனில் அந்தோணி ஆகிய 5 பேரை இணைத்து குறிப்பிட்டு உள்ளார். 

விரும்பத்தகாத தொழிலதிபர்கள்

இந்நிலையில், கேரளாவில் கொச்சி நகரில், முன்னாள் காங்கிரஸ்காரரான குலாம் நபி ஆசாத் தனியார் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியின்போது, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு விரும்பத்தகாத வெளிநாட்டு வர்த்தகர்களுடன் தொடர்பு உள்ளது என பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார். அவர் உள்பட, ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் அந்த வர்த்தகர்களுடன் தொடர்பு உள்ளது. இந்தியாவுக்கு வெளியே உள்பட, அவர் எங்கே போவார், விரும்பத்தகாத வர்த்தகர்கள் யாரையெல்லாம் அவர் சந்திக்கிறார் என்பது பற்றி நான் 10 எடுத்துக்காட்டுகளை தர முடியும் என்று கூறியுள்ளார்.

புதிய குணம் வெளிப்படுகிறது

இதுபற்றி காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு பிரிவுக்கான பொது செயலாளர் பொறுப்பு வகிக்கும் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், கடந்து போகும் ஒவ்வொரு நாளிலும், தனது உண்மையான குணம் வெளிப்படும் வகையில் புதிய ஆழத்திற்கு செல்லும் குலாம் நபி ஆசாத், பிரதமர் மோடியின் தீவிர விசுவாசியாக மாறி வருகிறார். அவர் பரிதாபத்திற்கு உரியவர் என்று மட்டுமே என்னால் கூறமுடியும் என தெரிவித்து உள்ளார்.