அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தல் பரப்புரையின் இறுதி நாளில் மனித உரிமைகள் கழகத்தின் சார்பாக பிரமாண்ட மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்குத் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈ.வெ.ரா. மறைந்ததை அடுத்து அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் திமுக கூட்டணியின் சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் அதிமுக சார்பில் தென்னரசு ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இந்நிலையில் பிப்ரவரி முதல் வாரத்திலிருந்தே ஈரோடு கிழக்குத் தொகுதி சூடுபிடிக்கத் தொடங்கியது. திமுக மற்றும் அதிமுக கட்சிகள் அங்கு தீவிர பரப்புரையில் ஈடுபட்டனர்.
எடப்பாடி பழனிச்சாமிக்கு வரவேற்பு
இந்நிலையில் நேற்று (25-02-2023) அன்று இறுதி நாள் தேர்தல் பரப்புரையில் இருபெரும் கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். திமுக சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், அதிமுக சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு சாதகமாக தீர்ப்பு வந்த நிலையில் அதிமுகவினர் மிகவும் உற்சாகமாக தேர்தல் பரப்புரையில் ஈடுப்பட்டனர். அப்போது மனித உரிமைக் கழகத்தின் நிறுவனர் டாக்டர் சுரேஷ் கண்ணன் அவர்கள் சார்பில் க்ரேன் மூலம் பிரமாண்ட மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. சுரேஷ் கண்ணன் அவர்கள், தொலைக்காட்சி விவாதங்களில் தொடர்ச்சியாக எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக விவாதங்களில் பங்கெடுத்து வருகிறார். இவர் அதிமுகவின் கூட்டணியிலும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை வாக்குப்பதிவு
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரை நேற்று நிறைவடைந்த நிலையில் நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துவருகிறது. வருகின்ற மார்ச் இரண்டம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவு அறிவிக்கப்படும்.