ஓட்டுநரின் செயலால் ஆட்டோவில் இருந்து குதித்து விபத்தில் சிக்கிய மாணவி

accident-news

மகாராஷ்டிராவில் வேகமாக சென்று கொண்டிருந்த ஆட்டோவிலிருந்து சிறுமி ஒருவர் சாலையில் குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலம் ஔரங்கங்காபாத் மாவட்டத்தில் உஷ்மன்புரா என்ற பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் இருந்து மாணவி ஒருவர் வீட்டிற்கு செல்வதற்காக ஆட்டோவில் ஏறியுள்ளார். ஆட்டோ சிறிது தூரம் சென்ற பிறகு ஓட்டுநர் மாணவியிடம் ஆபாசமாக பேசியுள்ளார். இதனால் செய்வதறியாது திகைத்த மாணவி மௌனம் காத்துள்ளார். ஆனால் ஆட்டோ ஓட்டுநனரோ தொடர்ந்து ஆபாசமாக பேசி, மாணவியிடம் தவறாக நடந்துள்ளார். ஓட்டுநரின் செயலால் அதிர்ச்சிக்குள்ளான மாணவி, ஆட்டோவை நிறுத்தும்படி மாணவி தெரிவித்துள்ளார். ஆனால் ஆட்டோவை நிறுத்தாமல், ஓட்டுநரோ தொடர்ந்து மாணவியிடம் அத்துமீறி நடக்க முயன்றுள்ளார். இதனால் ஆட்டோ சிலி கனா காம்ளக்ஸ் அருகே வந்தபோது, வேறு வழியின்றி மாணவி ஆட்டோவிலிருந்து சாலையில் குதித்துள்ளார். இதில் மாணவிக்கு தலையில் அடிபட்டுள்ளது. 

மாணவி ஆட்டோவிலிருந்து குதிப்பதை பார்த்த மக்கள் மற்றும் பின்னால் வந்த வாகன ஓட்டிகள் மாணவியை காப்பாற்றி அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்து, காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். பின்னர் நிகழ்விடத்திற்கு வந்த காவலர்கள் விசாரணை மேற்கொண்டு ஆட்டோ ஓட்டுநர் செயது அக்பர் ஹமீது என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். மாணவி ஆட்டோவிலிருந்து கீழே குதித்த சிசிடிவி வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாக பரவிவருகிறது. மாணவிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவரும் நிலையில், மகாராஷ்டிராவில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.https://twitter.com/i/status/1592795267568652290