ஆளுநர் எழுப்பும் கேள்விகளுக்கு அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் - டிடிவி தினகரன்

ttv dinakaran

டின்.பி.எஸ்.சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவி நியமணம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி எழுப்பியுள்ள கேள்விகளுக்கு தமிழ்நாடு அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கட்சி பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது; 

கோப்புகளை திருப்பி அனுப்பிய ஆளுநர் 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவி நியமனம் தொடர்பாக தமிழ்நாடு அரசு அனுப்பிய கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அவர்கள் திருப்பி அனுப்பியுள்ளதாக ஊடகங்கள் மற்றும் நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளது. டி.என்.பி.எஸ்.சி. பதவிகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட நபர்கள் எந்த அடிப்படையில் இறுதி செய்யப்பட்டனர்? உறுப்பினர்கள் தேர்வில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்கள் முறைப்படி பின்பற்றப்பட்டதா? போன்ற கேள்விகளை ஆளுநர் எழுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது

திமுகவிற்கு கண்டனம்

திமுக ஆட்சியமைந்த பிறகு டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பதவி காலியிடமாக இருப்பதால் அந்த ஆணையம் நடத்தும் தேர்வில் அடிக்கடி குளறுபடிகள் நடைபெறுவதாக புகார்கள் எழுந்துள்ளன. வேலைவாய்ப்புக்கான தேர்வை எதிர்பார்த்து லட்சக்கணக்கான இளைஞர்கள் காத்திருக்கும் நிலையில், விதிகளை மீறி தலைவர் மற்றும் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க முயற்சிக்கும் திமுக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்

நடவடிக்கை தேவை

ஆளுநர் எழுப்பியிருக்கும் கேள்விகளுக்கு உரிய விளக்கங்களை உடனடியாக வழங்கி, அவரின் ஒப்புதலை பெற்று காலியாக உள்ள டி.என்.பி.எஸ்.சி. தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிகளை முறைப்படி நிரப்ப திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். என அவர் தெரிவித்துள்ளார்.