திண்டிவனம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க சென்ற எச். ராஜா கைது.!

website post (83)

தடையை மீறி திண்டிவனம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க சென்ற பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவை பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே போலீஸார் நேற்று (மார்ச்-14) கைது செய்தனர்.

கைது

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பாஜக சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெறுவதாக இருந்தது. ஆனால், இக்கூட்டத்துக்கு போலீஸார் அனுமதி அளிக்கவில்லை. இருப்பினும், தடையை மீறி பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.

இதில் பங்கேற்க பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா நேற்று மாலை காரில் திண்டிவனம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது பெரம்பலூர் மாவட்ட எல்லையான திருமாந்துறை சுங்கச்சாவடி பகுதியில் சென்று கொண்டிருந்த அவரை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்ட போலீஸார் கைது செய்தனர்.

முழக்கம்

அப்போது, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவருடன் வந்த பாஜகவினர் சுமார் 30 பேர் திமுக அரசையும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரையும் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். பின்னர், கடலூர் மாவட்டம் ராமநத்தம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஒரு சமுதாய கூடத்தில் ஹெச்.ராஜாவை போலீஸார் தங்க வைத்தனர்.