மகா சிவராத்திரியின் வரலாறு...

அரசே ஏற்று நடத்தும் அளவிற்கு பெரிய திருவிழாவா மகா சிவராத்திரி.!

Shiv-resize03


நீலகாந்தா

புராணங்களின்படி, சமுத்திர மந்தன் என்று அழைக்கப்படும் பாற்கடலை வாசுகி என்ற பாம்பை கொண்டு தேவர்கள் கடைந்த போது விஷம் கடலில் கலந்தது. இது முழு உலகையும் அழிக்கக்கூடும் என்று தேவர்கள் நம்பியதால் பயந்துபோனார்கள். இதனையடுத்து அவர்கள் சிவபெருமானிடம் உதவிக்காக ஓடியபோது, ​​அவர் கொடிய விஷத்தை குடித்தார், ஆனால் அதை விழுங்குவதற்கு பதிலாக தொண்டையில் வைத்திருந்தார். இதனால் சிவ பெருமானின் தொண்டை நீல நிறமாக மாறியது. இதன் காரணமாக, அவர் நீல நிற தொண்டையான 'நீலகாந்தா' என்று அறியப்பட்டார். இந்த சம்பவம் நடைபெற்ற தினமே சிவராத்திரி என கொண்டாடப்படுவதாக அறியப்படுகிறது.

பிரம்மா-விஷ்ணு சண்டை

தங்களுக்குள் யார் பெரியவர் என்று பிரம்மனும், விஷ்ணுவும் வாதிட்டனர். அந்த வாத்திற்கு பதில் தேடி சிவபெருமானிடம் வந்தனர். அவர்களில் யார் பெரியவர் என்பதை விளக்கிட சிவபெருமான் ஒரு சோதனையை நடத்தினார். தனது தலையையும், பாதத்தையும் காண்பவரே உங்களுள் பெரியவர் என்று கூறி வானத்திற்கும், பூமிக்குமாய் ஜீவஜோதியாய் எழுந்தருளினார்.அந்த சோதனையை ஏற்று வராக அவதாரம் எடுத்து சிவபெருமானின் காலடியைக் காண பூமியைத் தோண்டி சென்றார் விஷ்ணு. அன்னத்தின் வடிவத்தைப் பெற்ற பிரம்மன் சிவபெருமானின் உச்சியைக் காண வானத்திற்கு எழும்பினார். இருவரும் கடுமையாக முயற்சித்தும் சிவனின் தலையையோ, அடியையோ காண முடியவில்லை. தனது தோல்வியை ஒப்புக்கொண்டு விஷ்ணு திரும்பினார். உயர உயரப் பறக்க முயன்ற பிரம்மன் களைப்படைந்திருந்த நிலையில், வானத்தில் இருந்து பூமியை நோக்கி விழுந்துக் கொண்டிருந்த தாழம்பூவைக் கண்டார். எங்கிருந்து வருகிறாய் என்று பிரம்மன் கேட்க, நான் சிவனின் தலைமுடியில் இருந்து விழுந்து கொண்டிருக்கிறேன். யுகம், யுகமாய் பயணித்தும் பூமியை அடையவில்லை என்று கூறியது. தான் சிவனின் தலை முடியைக் கண்டதாக அவரிடம் சாட்சி கூறுமாறு பிரம்மன் கேட்க, தாழம்பூ அதற்கு ஒப்புக்கொண்டு அவ்வாறே சிவபெருமானிடமும் உரைத்தது. பிரம்மனுக்காக தாழம்பூ பொய் கூறியதைக் கேட்ட சிவபெருமான் கோபமுற்று ஜோதி வடிவாய் இருந்தவர், அக்னிப் பிழம்பாக மாறினார். இதனால் இந்திரன், எமன், அக்னி, குபேரன் உள்ளிட்ட எட்டு பாலகர்களும் தேவர்களும் அமைதி பெற வேண்டினர். அவர்களின் வேண்டுதலை ஏற்ற சிவபெருமான், ஓர் மலையாய் அடங்கி சிறிய ஜோதியாய் அதன் உச்சியில் தென்பட, அனைவரும் வணங்கினர். அந்த நாளே மகா சிவராத்திரியாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.

சிவ-சக்தி

சிவன் மற்றும் சக்தியின் திருமணத்தின் புராணக்கதை மகாசிவராத்திரி பண்டிகை தொடர்பான மிக முக்கியமான புராணக்கதைகளில் ஒன்றாகும். சிவன் தனது தெய்வீக மனைவியான சக்தியுடன் இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டதை கதை விவரிக்கிறது. சிவன் மற்றும் சக்தியின் புராணங்களின்படி, சிவன் பார்வதியை மணந்த நாள் சிவராத்திரி என்று கொண்டாடப்படுகிறது.

வில்வ இலைகள்

சிவராத்திரி நாளில் ஒரு காட்டில் பல பறவைகளை கொன்ற வேட்டைக்காரன் ஒருவனை பசியுள்ள சிங்கம் ஒன்று துரத்திச் சென்றுள்ளது. சிங்கத்தின் தாக்குதலில் இருந்து தன்னைக் காப்பாற்ற வேட்டைக்காரர் வில்வ மரத்தில் ஏறினார். சிங்கம் மரத்தின் அடிப்பகுதியில் இரவு முழுவதும் காத்திருந்தது. மரத்திலிருந்து தூக்கத்தில் கீழே விழுவதைத் தவிர்ப்பதற்காகவும், விழித்திருக்க வேண்டும் என்பதற்காகவும் வேட்டைக்காரர் வில்வ மரத்தின் இலைகளை பறித்து கீழே இறக்கி போட்டு கொண்டே இருந்தார். அப்போது மரத்தின் அடிப்பகுதியில் அமைந்திருந்த ஒரு சிவலிங்கத்தின் மீது இலைகள் விழுந்தன. வில்வ இலைகளை வழங்குவதன் மூலம் மகிழ்ச்சி அடைந்த சிவன், பறவைகளை கொல்வதன் மூலம் வேட்டைக்காரன் செய்த பாவங்கள் அனைத்தையும் மன்னித்து வேட்டைக்காரனைக் காப்பாற்றினார். இந்த கதை சிவராத்திரியில் வில்வ இலைகளுடன் சிவனை வழிபடுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.

சிவலிங்கம்

சிவலிங்கத்தின் புராணக்கதை, மகா சிவராத்திரியுடன் ஆழமாக தொடர்புடையது. மகா சிவராத்திரி நாளில் தான் சிவன் முதலில் ஒரு லிங்க வடிவில் தன்னை வெளிப்படுத்திக்கொண்டதாக நம்பப்படுகிறது. அப்போதிருந்து, இந்த நாள் மிகவும் புனிதமான நாளாகவும், மகத்தான இரவு மகா சிவராத்திரி என்று கொண்டாடப்படுகிறது. இந்நாளை கொண்டாட, சிவபெருமானின் பக்தர்கள் பகலில்விரதம் இருந்து இரவு முழுவதும் இறைவனை வணங்குகிறார்கள். சிவராத்திரியில் சிவபெருமானை வணங்குவது ஒருவருக்கு மகிழ்ச்சியையும், செழிப்பையும் தருகிறது என்று கூறப்படுகிறது. 

அரசே ஏற்று நடத்தும் அளவிற்கு பெரிய திருவிழாவா மகா சிவராத்திரி.?

இப்படி இந்துக்கள் பலரால் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் மகா சிவராத்திரி, அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று கடந்த வருடம் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவுக்குரல்களும் எதிர்ப்பும் கிளம்பி இருந்தன. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடத்தப்படவுள்ள மகா சிவராத்திரி விழாவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆன்மிக பரப்புரையை அரசே முன்னெடுப்பது திராவிட கருத்தியலுக்கு எதிரானதாகும் என்று கடந்த வருடமே விசிக தரப்பில் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், இந்த வருடமும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மகா சிவராத்திரியை, அனைத்து சிவாலயங்களிலும் கலை, கலாச்சாரம் மற்றும் ஆன்மீக நிகழ்ச்சிகளை வெகு விமரிசையாக நடத்தக்கோரி, கோயில் நிர்வாகங்களுக்கும் சார் அலுவலர்களுக்கும் அறநிலையத்துறை ஆணையர் முரளிதரன் உத்தரவிட்டு இருக்கிறார். மேலும் சிவாலயங்களில் 18.02.2023 இன்று நடைபெற உள்ள மகா சிவராத்திரி திருவிழாவினை சிறப்பாகவும், வெகு விமர்சையாகவும் நடத்திட ஏதுவாக ஒரு சில அறிவுரைகளை சார்நிலை அலுவலர்களுக்கு வழங்கியுள்ளது இந்து சமய அறநிலையத்துறை.

கோயம்புத்தூர் மாவட்டம் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள 112 அடி சிவன் சிலை புகழ்மிக்க புனிதத் தலமாக கருதப்படுகிறது. இத்தலத்தில் மகா சிவராத்திரி தினத்தன்று இசை, நடனம், யோகா என சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தலத்தை 2017-ல் பிரதமர் மோடி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இத்தலத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வந்துபோன நிலையில், இந்த வருட மகா சிவராத்திரியான இன்று இந்திய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வருகை தருவது, தமிழ்நாடு அரசியல் சூழலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

ஒப்பாரும் மிக்காரும் இல்லா பெருமை கொண்ட ராஜேந்திர சோழனை கொண்டாடாத அரசு, இந்திய விடுதலைக்கு வித்திட்ட போராளிகளைக் கொண்டாடாத அரசு, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடிய இரட்டைமலை சீனிவாசனையும் இம்மானுவேல் சேகரனாரையும் கொண்டாடாத அரசு, காமராஜரையும் கக்கனையும் கொண்டாடாத அரசு, தமிழ்நாடு பெயர் பெற்றுத் தந்த சுந்தரலிங்கனாரை கொண்டாடாத அரசு, கோடிகளில் புரளும் பணமும் சர்ச்சையும் நிறைந்த ஈஷாவை நோக்கி அரசியல் தலைவர்கள் செல்வதும் மகா சிவராத்திரியை அரசே ஏற்று நடத்துவதும் திராவிடக் கருத்தியலுக்கு உறுத்தானதுதானா என்று பலராலும் கேட்கப்படும் கேள்விகள்...