ஈஷா யோகா மையத்திற்கு சென்ற மனைவியை காணவில்லை - கணவர் புகார் 

Isha Yoga

ஈஷா யோகா மையத்திற்கு சென்ற தனது மனைவியை காணவில்லை என அவரது கணவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோயம்புத்தூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்த பழனிக்குமார் என்பவர் கோவை மாவட்டத்தில் உள்ள ஆலந்துறை காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். இந்த புகாரில், “எனது மனைவி சுபஸ்ரீ (34) மற்றும் மகளுடன் அவிநாசியில் வசித்துவருகிறேன். திருப்பூரில் உள்ள தனியார் பனியன் கம்பெ “னியில் கடந்த 8 வருடங்களாக பணியாற்றிவருகிறேன். எனது மனைவி சுபஸ்ரீயும் நியூ திருப்பூர் பகுதியில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் கம்யூட்டர் ஆப்பரேட்டராக கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். கோயம்புத்தூர் ஆலந்துறையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் “Silence" என்னும் ஒருவார யோகா பயிற்சிக்கு 4 வருங்களுக்கு முன்னர் முதன்முறையாக கலந்துகொண்டார். அதேப்போல கடந்த 11-12-2022 அன்று காலை 6 மணிக்கு அதே வகுப்புக்கு மறுபடியும் கலந்துகொள்ள வேண்டி ஈஷா யோகா மையத்தில் விட்டுவிட்டு சென்றுவிட்டேன். ஒருவாரம் கழித்து 18-12-2022 அன்று காலை 11 மணிக்கு வகுப்பு முடித்து வீட்டுக்கு கூட்டிச்செல்ல நான் ஈஷா யோகா யோகா மையத்தில் காலை 7 மணியிலிருந்து காத்திருந்தேன். ஆனால் 11 மணிக்கு வகுப்பு முடிந்து மனைவி வெளியே வராததால், மாலை சுமார் 3 மணிக்கு உள்ளே சென்று விசாரித்தபோது, வகுப்பு முடிந்து அனைவரும் சென்றுவிட்டதாக வரவேற்பாளர் அலுவலகத்தில் தெரிவித்தனர். பின்னர் அங்குள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் பார்த்ததில் சுபஸ்ரீ சர்வ்வ வாசல் வழியாக ஒரு டாக்சியில் ஏறிச் செல்வது தெரியவந்தது.

 

இந்த நிலையில், ஒரு நம்பரில் இருந்து எனது போனுக்கு ஒரு மிஸ்ட் கால் வந்திருந்தது. பிறகு அந்த நம்பருக்கு திரும்ப அழைத்தேன். அதில் பேசிய நபர், ஒரு பெண் எனது கணவருக்கு பேச வேண்டும் என்று என்னுடைய போனை வாங்கி போன் செய்தார், ஆனால், அழைப்பை எடுக்காததால் செல்போனை என்னிடம் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார் எனத் தெரிவித்தார். எனது மனைவி எங்கு சென்றார் என்று தெரியவில்லை. அக்கம்பக்கத்தில் எல்லாம் தேடிப் பார்த்தும் கிடைக்காததால், எனது மனைவி சுபஸ்ரீயை கண்டுபிடித்துத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து பழனிகுமார் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஏற்கெனவே ஈஷா யோகா மையத்தைச் சுற்றி பல்வேறு சர்ச்சைகள் வலம் வரும் நிலையில் தற்போது ஈஷா யோகா மையத்திற்கு பயிற்சி வகுப்பிற்காக சென்ற தனது மனைவி மாயமானதாக கணவர் ஒருவர் புகார் அளித்து இருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.