நாட்டை காப்பாற்ற முடிந்த என்னால் என் மனைவியை காப்பாற்ற முடியவில்லை.. - மணிபூரில் நிகழும் அடுத்தடுத்த அதிர்ச்சி

manipur violence

தீக்கரையான மணிப்பூர்

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் நிகழும் நிகழும் அடுத்தடுத்த அதிர்ச்சி சம்பவங்கள் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. இரு சமூகத்திற்கிடையே நிகழ்ந்த கலவரம் வன்முறையாக வெடித்து பல்வேறு உயிர்கள் தீக்கரையாகின. மாநிலம் முழுவதும் கலவரம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், பழங்குடியின மக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன. அவர்களின் வீடுகள் அனைத்தும் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இதனால் அங்கு இணையதள சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு வன்முறை குறைந்துள்ளதாக தகவல்கள் வெளி வந்த வண்ணம் இருந்தன. 

நாட்டையே உலுக்கிய வீடியோ

மணிப்பூரில் பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை கலவரக்காரர்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வீடியோ ஒன்று வெளியாகி வைரலானது. இந்த சம்பவம் கடந்த மே மாதம் 4 ஆம் தேதி இந்த சம்பவம் நடைபெற்ற நிலையில், தற்போது வெளியாகி இருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தடுக்க முயன்ற பெண்ணின் சகோதரர் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. நாடு முழுவதும் இந்த வீடியோவுக்கு கடும் கண்டனம் எழுந்து உள்ளது.

பிரதமர் மோடி, ராகுல் காந்தி, உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவரின் கணவர் ஒரு ராணுவ வீரர்  என்ற தகவலும் தற்போது வெளியாகி உள்ளது. இது தொடர்பாக அவர் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
 
ராணுவ வீரரின் மனைவியும்.. தந்தையும் கொலை

திடீரென வந்த வன்முறை கும்பல் 2 அல்லது 3 பெண்களை தனியாக அழைத்து சென்றது. அதில் ஒருவர் என் மனைவி. அவர்களின் ஆடையை வலுக்கட்டாயமாக கழற்ற சொன்னது அந்த வெறியாட்ட கும்பல். அப்போது அவர்களை காப்பாற்ற கிராம மக்கள் வந்தனர். ஆனால் அந்த கும்பல் என் கண் முன்னே என் தந்தையை சுட்டுக்கொன்றது. நாட்டிற்காக கார்க்கில், இலங்கை சென்று பணியாற்றியுள்ளேன். 

வேடிக்கை பார்த்த காவல்துறை

ஆனால் எனது மனைவி, தந்தையை காப்பாற்ற முடியவில்லை. அந்த கும்பலுடன் போலீசும் இருந்தனர். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த வன்முறை வெறியாட்டம் நின்று விட்டதாக நினைக்கவில்லை. இது எதிர்காலத்திலும் தொடரும் என்ற அச்சம் உள்ளது. அந்த கலவரக்கும்பலுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்" என அவர் தெரிவித்துள்ளார். அவரது பேட்டி அளித்த வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் தீவிரமாக பரவி வருகிறது.  இந்நிலையில், பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.