சனாதனத்தை எதிர்த்தால் நாக்கை பிடுங்குவோம்.. மிரட்டல் விடுத்த மத்திய அமைச்சர்.!  

shekhawad

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதற்கு மத்திய அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் மிரட்டல் விடுத்திருக்கிறார். 

சனாதன சர்ச்சை

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் பற்றி பேசிய கருத்து தான் இன்று வரையிலும் இந்தியா முழுமைக்கும் பேசுபொருளாகியிருக்கிறது. சனாதனம் பற்றியான விவாதம் நாளுக்கு நாள் பேசப்பட்டு வருகிறது.

 மத்திய அமைச்சர் மிரட்டல்

இந்தநிலையில், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் அமைச்சர் உதயநிதிக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார். அவர் பேசியதாவது; "நமது முன்னோர்கள் உயிரைக்கொடுத்து சனாதனத்தை பாதுகாத்தனர். இப்போது சிலர் சனாதன தர்மத்தை ஒழிப்பதாக பேசுகிறார்கள். சனாதனத்தை ஒழிப்பதாக கூறுவதை பொருத்துக்கொள்ள முடியாது என்றும், சனாதனத்தை எதிர்த்தால் நாக்கை பிடுங்குவோம், கண்ணை நோண்டுவோம் என்றும், சனாதனத்திற்கு எதிராக பேசுபவர் எவரும் நாட்டில் அரசியல், அதிகாரம், அந்தஸ்தை தக்கவைக்க முடியாது" என்றும் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

தேசிய அரசியலில்  பதற்றம்

முன்னதாக, சனாதனம் பற்றி பேசியவர்களுக்கு உரிய பதிலடி கொடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியதாக கூறப்படும் நிலையில், மத்திய அமைச்சர் ஷெகாவத் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருப்பது பேசுபொருளாக மாறியிருக்கிறது. ஏற்கனவே, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு சாமியார் ஒருவர் விலை வைத்த விவகாரம் சர்ச்சையான நிலையில், தற்போது மத்திய அமைச்சர் மிரட்டல் விடும் தொணியில் பேசியிருப்பது தேசிய அரசியலில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.