சென்னை சூப்பர் கிங்ஸ் வெளியிட்ட புகைப்படம் வைரல்! 

Bravo and Pollard

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் மார்பிங் செய்து வெளியிட்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவிவருகிறது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று (03-12-2022) அதனுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் இணையதளத்தில் பிராவோவும், பொல்லார்டும் செஸ் விளையாடுவது போன்ற புகைப்படத்தை பகிர்ந்தது. இந்த புகைப்படம் பகிரப்பட்ட சில நிமிடங்களில் பல லைக்குகளும், ரிட்வீட்டுகளும் செய்யப்பட்டன. ஆனால் இது ஒரு மார்பிங் செய்யப்பட்ட புகைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. 

பிஃபா கால்பந்து தொடர்

கத்தாரில் ஃபிபா-2022 உலக கோப்பை கால்பந்து தொடர் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உலகளவில் மிகவும் பிரபலமான கால்பந்து வீரர்களாக கிறிஸ்டினா ரொனால்டோ மற்றும் லியோனல் மெஸ்ஸி ஆகியோரை வைத்து லூயிஸ் வுயிட்டோன் என்ற நிறுவனம் இருவரும் செஸ் விளையாடுவதுபோல விளம்பர படம் எடுத்தது. இது புகைப்படமாக உலகளவில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த புகைப்படத்தை மார்ப் செய்தே சென்னை சூப்பர் கிங்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. 

காரணம் என்ன? 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய அணிகளில் ஒருவர் டுவைன் பிராவோ. அவர் ஓரிரு தினங்களுக்கு முன்னதாக ஐ.பி.எல்.போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்நிலையில் பிரவோ சென்னை அணியின் பவுலிங் பயிற்சியாளராக செயல்படுவார் என சி.எஸ்.கே. நிர்வாகம் நேற்று அறிவித்தது. 

இதற்கு முன்னதாக மும்பை அணியின் நட்சத்திர வீரர் பொல்லார்ட் ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், அவரை பேட்டிங் பயிற்சியாளராக நியமித்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம். இதனாலேயே இரண்டு மேற்கிந்திய அணியின் முன்னாள் வீரர்கள் ஐ.பி.எல். தொடரில் பிரபலமான சென்னை மற்றும் மும்பை அணிக்கு பயிற்சியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்பதை குறிக்கும் விதமாகவே இருவரும் செஸ் விளையாடுவதைப் போன்ற புகைப்படத்தை மார்ப் செய்து சி.எஸ்.கே. அணி வெளியிட்டுள்ளது. 

ஐபிஎல் தொடங்கப்பட்ட 2008 ஆம் ஆண்டு முதல் மேற்கிந்திய வீரர் டுவைன் பிராவோ போட்டியில் விளையாடி வருகிறார். 2017 ஆண்டில் ஏற்பட்ட காயம் காரணமாக அந்த சீசனில் மட்டும் பங்கேற்காத பிராவோ 2008 முதல் 2010 வரை மும்பை அணிக்கா விளையாடினார். இதன் பிறகு 2011 ஆண்டு நடந்த ஏலத்தில் சிஎஸ்கே அணிக்காக வாங்கப்பட்ட பிரவோ தமிழ்நாட்டு ரசிகர்கள் மட்டுமல்லாமல், இந்தியளவில் ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்துள்ளார். சிஎஸ்கே அணிக்கு வந்தது முதல் அவரது ஆட்டத்திறன் பலராலும் பாராட்டப்பட்டது. முக்கியமான கட்டத்தில் கேப்டன் டோனிக்கு பக்கபலமாய் இருந்து அணிக்கு சிறப்பான பங்களித்துள்ளார். 

ரசிகர்களை கவர்ந்த பிராவோவின் உடல்மொழிகள்

இதுவரை மொத்தமாக 15 ஐபிஎல் சீசனில் விளையாடி இதுவரை 153 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அதேபோல் பேட்டிங்கிலும் கலக்கி வரும் பிராவோ 15 சீசனில் விளையாடி 1560 ரன்கள் எடுத்துள்ளார். ஒவ்வொரு சீசனிலும் ஆல் ரவுண்டராக ஜொலித்த பிரவோ போட்டியின் போது களத்தில் நடனமாடி ரசிகர்களை மகிழ்விப்பார். விக்கெட் எடுக்கும் போதும், கேட்ச் பிடிக்கும் போதும் அவர் வெளிப்படுத்தும் உடல் மொழிகள் ரசிகர்களை ஆர்ப்பரிக்க செய்யும். 2012 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் டி20 உலக கோப்பையை வென்ற மேற்கிந்திய அணியில் இடம் பிடித்து அத்தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். 

ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

இதன் பிறகு சர்வதே கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்த பிராவோ தொடர்ந்து ஐபிஎல் போட்டி தொடரில் மட்டும் பங்கேற்று வந்துள்ளார். இந்நிலையில், ஐபிஎல் தொடரிலிருந்தும் ஓய்வுப் பெறப்போவதாக பிராவோ அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிராவோ, வாழ்வில் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் ஓய்வு பெற முடிவெடித்துள்ளதாகவும், கூறியுள்ளார். 

சிஎஸ்கே நிர்வாகம் வழங்கிய புதிய பொறுப்பு

இந்நிலையில், சிஎஸ்கே அணியில் இருந்து ஓய்வு பெற்றாலும், அந்த அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக தொடரவுள்ளதாக அதிகாரப் பூர்வ அறிவிப்பை சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிராவோ, சிஎஸ்கே அணியில் விளையாடியது மகிழ்ச்சி அளிப்பதாகவும், தற்போது எனக்கு அளிக்கப்பட்டிருந்து பொறுப்பை மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்குவதாகவும் தொடர்ந்து ஐபிஎல்லில் பயணிப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறியுள்ளார். இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள சிஎஸ்கே ரசிகர்கள் அவரது பதிவை அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.