மதிமுகவின் முதன்மை செயலாளராகிறாரா துரை வைகோ.? 

cfb

கடந்த காலத்தில் மக்களின் உரிமைக்கு பாராளுமன்றங்களில் கர்ஜித்துக்கொண்டிருந்தவர் மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ. அப்படி மக்களின் உரிமைகளைப் பேசி மக்களின் மனங்களை வென்ற மதிமுக காலப்போக்கில் மதிமுக என்ற மறுமலர்ச்சி கழகம் மக்களின் மனங்களில் இருந்து மறையத் தொடங்கியது. காலத்தின் தேவை அதனை மீட்டுருவாக்கம் செய்வது. அந்தவகையில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக மீண்டும் தேர்வு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் 29-ம் தேதி மதிமுகவிற்கு பேரிடியாய் வந்து விழுந்தது மதிமுகவை திமுகவுடன் இணைத்துவிடலாம் என்று அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி எழுதிய கடிதம். தற்போதைய மதிமுகவின் மீட்டுருவாக்கத்திற்கு அந்தக் கடிதம் ஒரு காரணமாககூட அமைந்திருக்கலாம். அந்தக் கடிதத்தில், மதிமுகவை திமுகவுடன் இணைத்துவிடலாம் என்றும், மதிமுகவின் தற்போதைய செயல்பாடுகள் வருத்தம் அளிப்பதாகவும், மகனை ஆதரித்து அரவணைப்பதும், சந்தர்ப்பவாத அரசியலும் தமிழக மக்களை எள்ளி நகையாட வைத்துவிட்டது என்றும், வைகோ இன்னமும் உணராமல் இருப்பது வேதனை அளிக்கிறது என்று திருப்பூர் துரைசாமி எழுதிய கடிதம் தற்போது புலியை தட்டியெழுப்பியிருக்கிறது என்றே பார்க்க முடிகிறது. 

மேலும், வைகோவின் குழப்ப அரசியல் காரணமாக பெருவாரியான மதிமுக தலைவர்களும், தொண்டர்களும் திமுகவிற்கே சென்று விட்டனர். 30 ஆண்டுகளாக வைகோவின் உணர்ச்சிமிக்க பேச்சை நம்பி வாழ்க்கையை இழந்த தோழர்கள், மேலும் ஏமாற்றம் அடையாமல் இருக்க மதிமுகவை தாய் கழகத்துடன் இணைக்க வேண்டும் என்று கடிதமிட்டது வைகோ மத்தியில் பேரதிர்ச்சியை தந்தது.

இந்தநிலையில்தான், மதிமுகவின் பொதுச்செயலாளராக மீண்டும் வைகோ தேர்வு செய்யப்படுவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஜூன் 14-ம் தேதி நடைபெறக்கூடிய மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என்றும், இதை முன்னிட்டு ஜூன் 1-ம் தேதி வேட்புமனு தாக்கல் நடைபெறும் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது. 

வைகோவுக்கு எதிராக தொடர்ந்து கருத்துக்களை தெரிவித்து வரும் மதிமுக அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமிக்கு பதில், புதிய அவைத் தலைவராக கோவையைச் சேர்ந்த ஆடிட்டர் அர்ஜுன்ராஜ் தேர்வு செய்யப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், மதிமுகவின் தலைமை நிலைய செயலாளராக இருக்கக் கூடிய துரை வைகோ, மதிமுகவில் முதன்மைச் செயலாளர் என்ற புதிய பதவி உருவாக்கப்பட்டு அதற்கு தேர்வு செய்யப்பட உள்ளார் என்கிற தகவலும் சொல்லப்படுகிறது. மேலும், மதிமுகவின் பொருளாளராக இருக்கக்கூடிய கணேசமூர்த்தி அப்பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்குப் பதில் புதிய பொருளாளர் நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.