”கண்ணா கூட்டமா வந்தாலும் ஏத்துக்க மாட்டோம்” – ஜெயக்குமார் பேட்டி!

ops jayakumar

அணியாக வந்தாலும், தனியாக வந்தாலும் அதிமுக கூட்டணியில் சசிகலா, ஓபிஎஸை இணைக்க மாட்டோம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

எம்ஜிஆர் நினைவு நாள்

முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 35-வது நினைவு நாளையொட்டி சென்னை மெரினாவில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் எடப்பாடி அணியினர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். 

உறுதிமொழி ஏற்பு

இதன்பின் எம்ஜிஆர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் உறுதிமொழி ஏற்றுள்ளனர். அதில், “குடும்ப அரசியல் நடத்தி கொடி பிடிக்கும் தொண்டனை துச்சம் என நினைப்பது திமுகவின் வாடிக்கை. திமுகவை வீழ்த்துவதில் வெற்றி கண்ட எம்ஜிஆர் காட்டிய பாதையில் திமுகவை வீழ்த்துவோம்” என எடப்பாடி உள்ளிட்ட அதிமுகவினர் உறுதிமொழி ஏற்றனர்.

ஜெயக்குமார் பேட்டி 

இந்நிலையில், அணியாக வந்தாலும், தனியாக வந்தாலும் அதிமுக கூட்டணியில் சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரனை இணைக்க மாட்டோம் என ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார். 

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அப்போது பேசிய அவர், ”எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக சிறப்பாக செயல்படுகிறது. எந்த நிலைமையிலும் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும். கூட்டணியில் இடம்பெறுபவர்களுக்கு அதிமுக தான் இடம் ஒதுக்கும்” என்று தெரிவித்தார். 

சசிகலா. ஓபிஎஸை ஏற்க மாட்டோம்

மேலும் பேசிய அவர், “அணியாக வந்தாலும், தனியாக வந்தாலும் அதிமுக கூட்டணியில் சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரனை இணைக்க மாட்டோம்” என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.