கேரள படகு விபத்து.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் உயிரிழந்த சோகம்.! 

kerala boat

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தானூர் நகராட்சி உள்ள பரப்பனங்காடி பகுதியில் கடற்கரை அமைந்துள்ளது. கடலும் ஆறும் சங்கமிக்கும் இடமான பரப்பனங்காடி கடற்கரை பகுதியில் சுற்றுலா பயணிகளுக்காக படகு போக்குவரத்தும் இயக்கப்படுகிறது. நேற்று விடுமுறை என்பதால் பரப்பனங்காடி கடற்கரை பகுதியில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர்.

இந்த நிலையில், நேற்று நசீர் என்பவருக்கு சொந்தமான படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குழந்தைகள் உள்பட 22 பேர் பலியாகி உள்ளனர். 20 பேர் தான் பயணம் செய்ய அனுமதி உள்ள படகில் 40 பேர் வரை பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால், அளவுக்கதிகமான பாரம் தாங்காமல் படகு கவிழ்ந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் நீதி விசாரணைக்கு உத்தரவிட்டு, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அளிக்க உத்தரவிட்டுள்ளார். மேலும், பிரதமர் மோடியும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம் அளித்துள்ளார். படகின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு தலைமறைவான படகின் உரிமையாளர் நசீரை போலீசார் தேடி வருகின்றனர். 

இந்த விபத்தில் பலியான 22 பேரில் 11 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தால் கேரளாவில் உள்ள மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.