பாலியல் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்த நீதிமன்றம்!

Court

உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் மாவட்ட நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதி விபின் குமார், பாலியல் குற்றவாளிக்கு இரண்டே மாதங்களுக்குள் மரண தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கியுள்ளார். 

சிறுமியை ஏமாற்றிய இளைஞர்

உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் சதீஷ் குமார் என்ற 30 வயது இளைஞர் கடந்த அக்டோபர் மாதம், தனது அண்டை வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வந்த 10 வயது சிறுமியை, ஆசை வார்த்தை கூறி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். வீட்டிற்கு வந்த சிறுமிக்கு உணவு கொடுத்துள்ளார். பின்னர் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த சதீஷ் குமார், சிறுமியை வெளியே விட்டால் உண்மை தெரிந்துவிடும் என்ற அச்சத்தில் சிறுமியின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். 

சிறுமியை புதைத்த கொலைகாரன் 

பின்னர் சிறுமியின் உடலை மறைப்பதற்கு முடிவு செய்த சதீஷ் குமார், அருகில் இருக்கும் காட்டிற்குள் சிறுமியின் உடலைக் கொண்டு சென்று குழி தோண்டி புதைத்துள்ளார். 

உடலை கண்டுபிடித்த போலீசார்

பின்னர் பெற்றோரின் புகாரையடுத்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவந்த போலீசார், அக்டோபர் மாதம் 13ம் தேதி, காட்டிற்குள் புதைக்கப்பட்ட சிறுமியின் உடலை கண்டு பிடித்து, சதீஷ் குமாரை கைது செய்தனர். மேலும் சதீஷ் குமார் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 363ன் கீழ் ஆட்கடத்தல், பிரிவு 302ன் கீழ் கொலை செய்தல், பிரிவு 376ன் கீழ் பாலியல் வன்புணர்வு செய்தல் மேலும் போக்சோ சட்டப் பிரிவு 5m/6ன் கீழும் வழக்குப்பதிவு செய்தனர். 

விரைந்து வழங்கப்பட்ட தீர்ப்பு

அக்டோபர் மாதம் வழக்கு பதிவு செய்யப்பட்டு, 26 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் விசாரணை முடிவுற்றது. பின்னர் தீர்ப்பு வழங்கும் தேதி ஒத்திவைக்கப்பட்டது. தற்போது இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய மதுரா மாவட்ட கூடுதல் நீதிபதி விபின் குமார், சதீஷ் குமாரை குற்றவாளியாக அறிவித்து, தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பு கூறினார். வழக்கு பதிவு செய்யப்பட்டு 56 நாட்களுக்குள் குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்பட்டிருப்பது பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரால் வரவேற்கப்பட்டுள்ளது.