அறுவடையை முடித்து நிலங்களை ஒப்படைக்க வேண்டும் - விவசாயிகளுக்கு உயர்நீதி மன்றம் உத்தரவு

hc vs nlc

நெய்வேலியில் இயங்கி வரும் என்.எல்.சி நிறுவனமானது சுரங்க பாதை அமைக்கும் திட்டத்திற்காக அப்பகுதியில் உள்ள நிலங்களை கையப்படுத்தியது. இதற்கிடையே அப்பகுதி விவசாயிகள் அந்நிலங்களில் சாகுபடி செய்து வரும் நிலையில், ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு சுரங்க திட்ட பணிகளை தொடங்கியது. 

உயர் நீதிமன்றத்தில் வழக்கு

நெய்வேலியில் என்.எல்.சி. நிர்வாகம் கையகப்படுத்தியுள்ள நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர் அறுவடை செய்யப்படும் வரை விவசாயிகளுக்கு என்.எல்.சி. நிர்வாகம் இடையூறு செய்யக்கூடாது என உத்தரவிடக்கோரி விவசாயி முருகன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 
இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம் என்.எல்.சி. கையகப்படுத்திய நிலங்களில் அறுவடையை முடித்து நிலங்களை ஒப்படைக்க வேண்டும் என்று கடலூர் விவசாயிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் புதிதாக அறுவடை செய்யக்கூடாது என்றும் மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

உரிமையாளர்கள் தலையிட முடியாது

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதி மன்ற நீதிபதி சுப்பிரமணியம், தொழில், உட்கட்டமைப்பு வளர்ச்சி விவகாரங்களில் அரசின் கொள்கை முடிவுகளில் நில உரிமையாளர்கள் தலையிட முடியாது என்று கூறியுள்ளார். ரூ.25 லட்சம் இழப்பீடு என்பது 2014-ம் ஆண்டுக்குப் பிறகு கையகப்படுத்திய நிலங்களுக்கு மட்டுமே வழங்க முடியும் என்றும் நீதிபதி சுப்பிரமணியம் கூறியுள்ளார்.