பாதுகாப்பு கோரி நீதிமன்றத்தில் மனு.!

நரபலிக்கு பயந்து தமிழ்நாட்டில் தஞ்சமடைந்த மத்திய பிரதேச பெண்..

Cult-resz

வளர்ப்புத் தாய் நரபலி கொடுக்க இருப்பதால் தமிழ்நாட்டுக்கு தப்பி வந்த தனக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இது தொடர்பாக மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி பெண் ஷாலினி சர்மா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் எனும் ஏ.பி.வி.பி. அமைப்பைச் சேர்ந்த எனது வளர்ப்புத் தாய் சுதா ஷர்மா, மாந்திரீகங்களிலும் மூட நம்பிக்கைகளிலும் நம்பிக்கை கொண்டவர். 
என்னை நரபலி கொடுக்க அவர் முடிவு செய்தார்.

ஏற்கனவே எனது 10 வயது சகோதரனையும், மேலும் இரண்டு பேரையும் அவர் நரபலி கொடுத்துள்ளார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு எதிராக போலீசில் புகாரளிக்க யாருக்கும் தைரியமில்லை. நரபலியில் இருந்து தப்பிப்பதற்காக தட்சிணாமூர்த்தி என்ற நண்பரின் உதவியுடன் பிப்ரவரி 17ம் தேதி சென்னை வந்தேன்.

தந்தைப் பெரியார் திராவிடர் கழக செயலாளர் வீட்டில் தங்கியிருக்கும் என்னை, குடும்பத்தினரும் ஏ.பி.வி.பி அமைப்பினரும் வலுக்கட்டாயமாக போபால் அழைத்துச் சென்று விடுவார்கள் என அச்சப்படுகிறேன்.  வலுக்கட்டாயமாக என்னை போபாலுக்கு  அழைத்து சென்று விட்டால் என்னை நரபலி கொடுக்கும் அபாயம் உள்ளது. தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பான இடம் எனவே, எனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

நீதியரசர் ஜி.சந்திரசேகரன் முன்பு ஆஜரான அரசு அரசு வழக்கறிஞர் (எஸ்பிபி) ஹசன் முகமது ஜின்னா, தந்தை பெரியார் திராவிடர் கழக அலுவலகத்தில் தற்போது வசிக்கும் பெண்ணின் பாதுகாப்பை காவல்துறை நிச்சயம் உறுதி செய்யும் என்றார். மேலும் மூன்று வாரங்களுக்குள் மனுதாரரின் பெற்றோருக்கும், போபால் காவல் ஆணையருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மூன்று வாரங்களுக்குப் பிறகு அறிக்கையை தாக்கல் செய்யுமாறு திரு.ஜின்னாவிடம் நீதிபதி கேட்டுக் கொண்டார்.