மணிப்பூர் கொடூரம்.. நிர்வாணமாக்கி கூட்டு பாலியல்.. அரசியல் தலைவர்கள் கொந்தளிப்பு.! 

kuki

கலவரமான மணிப்பூர்

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மொய்தி இன மக்களுக்கும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த குக்கி இனமக்களுக்கும் இடையே கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக மோதல் நடைபெற்று வருகிறது. கடந்த மே மாதம் 3 ம் தேதி தொடங்கிய கலவரம் இன்று வரையிலும் ஓய்ந்தபாடில்லை. இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் காலப்போக்கில் மணிப்பூர் கலவர பூமியாக மாறியது. கலவரத்தால் மணிப்பூரில் உள்ள வீடுகள், கடைகள், கோயில்கள் தீக்கிரையாக்கப்பட்டன. 

ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த வேண்டும்

கலவரம் நாளுக்கு நாள் தீவிரமடைந்தநிலையில், அரசியல் கட்சிகள் பாஜக அரசு இந்த விவகாரத்தில் மெளனம் காத்து வருவதாக குற்றம் சாட்டி வந்தனர். இதையடுத்து, அமித் ஷா தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் டெல்லியில் கடந்த ஜூன் 24-ம் தேதி நடைபெற்றது. கூட்டத்தில் பெரும்பாலான எதிர்க்கட்சித் தலைவர்கள் 'மணிப்பூர் விவகாரத்தில் உண்மையில் தீர்வு காண வேண்டுமென்றால், முதல்வர் பிரேன் சிங்கை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும். ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்' என வலியுறுத்தினர். 

கொடூரமான வீடியோ வைரல்

இரண்டு மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த கலவரத்தில், கடந்த மே மாதம் நடைபெற்ற கொடூரமான காணொளி நேற்றைய தினம் வெளியானது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், இந்தியா முழுவதும் பேசுபொருளாக மாறியது. அந்தக் காணொளியில், மொய்தி இனத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள், குக்கி பழங்குடி இனத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை நிர்வாணமாக்கி பொதுவெளியில் அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தி, அந்தப் பெண்களை கூட்டு பாலியல் செய்திருக்கின்றனர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

ராகுல் காந்தி கண்டனம்

பிரதமரின் மவுனமும் செயலற்ற தன்மையுமே மணிப்பூர் அராஜகத்திற்கு காரணம் என ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். வன்முறைகளை கண்டுகொள்ளாமல் பிரதமர் கண்மூடி அமர்ந்திருப்பது ஏன்? என பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். டபுள் என்ஜினால் பயங்கரம் நிகழ்ந்த பிறகும் பிரதமர் அமைதியாகத்தான் இருப்பார் என இந்திய மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கண்டனம் தெரிவித்திருக்கிறார். 

குஷ்பு கொந்தளிப்பு

இதையடுத்து, மணிப்பூரில் நடந்த கொடூரம் பற்றி நேற்று காணொளி ஒன்று வெளியான நிலையில்,  மணிப்பூரில் பெண்களுக்கு கொடுமை இழைத்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு கொந்தளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "மணிப்பூர் பெண்களுக்கு கொடுமை இழைத்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்றும், பெண்களுக்கு நேர்ந்த கொடுமையை வேடிக்கை பார்த்தவர்களுக்கும் தண்டனை வழங்க வேண்டும் என்றும் குற்றம் சாட்டியிருக்கிறார். மேலும், மத கலவரம், குடும்ப பிரச்னை என எதுவாக இருந்தாலும் பெண்களே குறிவைக்கப்படுகின்றனர் என்றும்,  சில ஆண்கள் எந்த அளவுக்கு மனிதத்தன்மை அற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதை இச்சம்பவம் காட்டுகிறது" என கண்டனம் தெரிவித்திருக்கிறார். 

இதயம் நொறுங்கியது.. மு.க.ஸ்டாலின் ட்வீட்

இதையடுத்து, மணிப்பூரில் பெண்கள் மீதான வன்முறையை கண்டு இதயம் நொறுங்கியது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்திருக்கிறார். அவர் குறிப்பிட்டுள்ள பதிவில், "இதுபோன்ற வெறுப்புணர்வு, மனித குலத்தின் ஆன்மாவை சிதைத்துவிடும் எனவும், எங்கே போனது நமது கூட்டு மனசாட்சி? எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், மணிப்பூரில் நேரிட்ட கொடூரத்தை அனைவரும் இணைந்து எதிர்க்க வேண்டும் என்றும், மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.  

முதல் நாள் கூட்டத்தொடர் அமளி!

மணிப்பூரில் குக்கி பழங்குடியின பெண்கள் இருவரை ஆடைகளின்றி அழைத்துச் சென்று வன்கொடுமை செய்த காணொளி வெளியானநிலையில், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க பழங்குடி அமைப்புகள் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, காவல்துறையினர் அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

மணிப்பூரில் பெண்களுக்கு நேரிட்ட கொடூரத்தின் காட்சியை சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.  ஆடைகளின்றி 2 பெண்களை ஊர்வலமாக அழைத்துச்சென்ற காட்சியை பகிரக்கூடாது என்றும், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதள நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இன்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறவுள்ளநிலையில், மணிப்பூர் பிரச்னையை எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளது. இதனால், முதல் நாள் கூட்டத்தொடரில் அமளி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.