"அமைச்சர் செந்தில் பாலாஜி சுய நினைவுடன் இருக்கிறார்.." மூன்று மனுக்கள் மீதான விசாரணை தொடக்கம்.!

court

செந்தில் பாலாஜி கைது

தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று அமலாக்கத்துறையினாரால் கைது செய்யப்பட்டதையடுத்து, இந்தியா முழுவதும் எதிரொலித்தது. அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்து அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லும்போது திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலியால் சென்னை அரசு ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

மூன்று மனுக்கள் மீதான விசாரணை

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கக்கூடியநிலையில், செந்தில் பாலாஜி தரப்பில் தங்களுக்கு இடைக்கால ஜாமீன் அளிக்க வேண்டும் என்ற ஒரு மனுவும், செந்தில் பாலாஜி ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மேல் சிகிச்சைக்காக காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கக்கோரிய மனுவும், அமலாக்கத்துறையினர் சார்பில் அமைச்சர் செந்தில் பாலாஜியை 15 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கோரிய மனுவும் விசாரிக்கப்பட உள்ளது. இந்த மூன்று மனுவும் சென்னை மாவட்ட உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அல்லி தலைமையில் விசாரிக்கப்பட உள்ளது.

நீதிமன்ற காவல்

அரசு ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியை, சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்ற தலைமை நீதிபதி அல்லி, நேற்று நேரில் சென்று விசாரணை நடத்தினார். விசாரணையில் இருதரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இறுதியில் அமைச்சர் செந்தில் பாலாஜியை வரும் 28-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டனர். மேலும் அந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெறும் என்று உத்தரவிட்டனர்.

செந்தில் பாலாஜி சுய நினைவுடன் இருக்கிறார்

இந்தநிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து ஓமந்தூரார் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் ரத்த நாளங்களில் வலது புறத்தில் 90% இடதுபுறத்தில் 80% அடைப்பு மொத்தம் 3 இடங்களில் அடைப்பு இருப்பதால் அறுவை சிகிச்சைக்கு மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜி சுய நினைவுடன் இருப்பதாகவும், இதயதுடிப்பு, ரத்த அழுத்தம் சீராக இருப்பதாகவும், மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகளும், உணவுகளும் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்படுகிறது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

தீர்ப்பு பிற்பகல்

அமைச்சர் செந்தில் பாலாஜியின் மேல் சிகிச்சைக்காக காவிரி அல்லது அப்பல்லோ மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டிருப்பதாகவும், நீதிமன்ற அனுமதி கிடைக்காவிட்டால் ஓமந்தூரார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் சற்று நேரத்தில் செந்தில் பாலாஜி தொடர்பான அந்த மூன்று மனுக்கள் மீதான விசாரணை தொடங்க இருக்கிறது. அந்த மனுக்கள் மீதான தீர்ப்பு இன்று பிற்பகலுக்குள் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.