மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.08 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர்கள்

kn nehru

மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கர வாகனம்

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,  பள்ளிக்கல்வித்துறைஅமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி ஆகியோர் கலந்து கொண்டு இணைப்பு சக்கரம் பொருத்திய வாகனங்களை 60 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு வழங்கினர். இதே போல் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் சார்பில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பேரூராட்சிகளுக்கும் ரூபாய் 47 லட்சத்து 19,000 செலவில் குப்பை அள்ளும் வாகனங்களையும் அமைச்சர்கள் வழங்கினார்கள். மேலும், இந்நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் திருச்சி மாவட்டம், மணச்சநல்லூர் அடுத்துள்ள பாளையூர் கிராமத்தைச் சேர்ந்த தங்கம்மாள் என்பவர்  பாம்பு கடித்து இறந்த நிலையில் தமிழக அரசு சார்பில் அவரது குடும்பத்தினருக்கு  நிவாரண நிதியாக ரூபாய் 1லட்சம் வழங்கப்பட்டது. 

மாற்றுத்திறனாளிகளுக்கான பேட்டரி வாகனங்கள்

மேலும், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் தோறும்  பொதுமக்கள்  மனுக்கள் வழங்க வரும் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் பயன்பெறும் வகையில் ருபாய் 4லட்சம் 79 ஆயிரம் மதிப்பிலான பேட்டரியால் இயங்கும் வாகனத்தையும் அமைச்சர்கள் பயன்பாட்டிற்கு வழங்கினர். மேலும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல துறை சார்பில் திருச்சி மாவட்ட கிறிஸ்துவ மகளிர் உதவி சங்கத்திற்கு ரூ 5,25,000 நத்திட்டங்களை வழங்கினார். மொத்தமாக  ஒரு கோடியே 8லட்சத்து33ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்டங்களை வழங்கினார்கள். இந்நிகழ்வில் திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் சத்தியாபிரியா, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜீத்குமார், மேயர் அன்பழகன், மண்டல தலைவர் மதிவாணன், மாமன்ற உறுப்பினர்கள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள், பலர் கலந்து கொண்டனர்.

முதல்வரின் தஞ்சை பயணம்

இதை தொடர்ந்து செய்தியாளருக்கு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், நாளை மறுநாள் தஞ்சை மாவட்டத்தில் டெல்டா பகுதியில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை தமிழக முதல்வர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளதாகவும், இதனை தொடர்ந்து பூலையாறு, புள்ளம்பாடி பகுதியில் உள்ள நந்தியாறு ஆகியவற்றை பார்வையிட்டு பின்னர் திருச்சிக்கு வர உள்ளதாகவும், தொடர்ந்து  விமான மூலமாக  சென்னைக்கு புறப்பட்டு செல்ல உள்ளதாகவும் தெரிவித்தார்.