மனைவிக்கு எய்ட்ஸ் என கூறி விவாகரத்து கேட்ட கணவர்: உயர்நீதிமன்றம் சொன்னது என்ன? 

Mumbai court

மகாராஷ்டிர மாநிலத்தில் மனைவிக்கு எய்ட்ஸ் எனக்கூறி விவாகரத்து கேட்ட கணவருக்கு விவாகரத்து வழங்க மும்பை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலம் பூனேவைச் சேர்ந்த 44 வயதான ஒருவருக்கு கடந்த 2003ம் ஆண்டு திருமணம் நடைப்பெற்றுள்ளது. ஆனால் கணவன் மனைவிக்கு இடையே சரியான புரிதல் ஏற்படாததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் மனைவிக்கு காசநோய் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் தனது மனைவிக்கு எய்ட்ஸ் இருப்பதாகக் கூறி பூனே குடும்ப நல நீதி மன்றத்தில் விவாகரத்து கோரி கணவர் மனுத்தாக்கல் செய்தார். ஆனால் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கணவரின் குற்றச்சாட்டை நிரூபிக்க போதுமான ஆதரங்கள் இல்லை, மனைவிக்கு எய்ட்ஸ் இருப்பது மருத்துவ சோதனையில் உறுதி செய்யப்படவில்லை எனக்கூறி கணவரின் கோரிக்கையை நிராகரித்து 2011ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. 

ஆனால் கணவரோ மனைவிக்கு எய்ட்ஸ் உள்ளது என மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது என உறவினர்களிடமும் நண்பர்களிடமும் கூறி வந்துள்ளார். இதனால் மனைவி கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். 

மேலும் கணவர் தனக்கு விவாகரத்து வேண்டும் எனக்கூறி மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், கடந்த வாரம் மனைவிக்கு எய்ட்ஸ் இருப்பதாகக் கூறிய குற்றச்சாட்டை நிரூபிக்க தவறியதாகக் கூறி விவாகரத்து வழங்க மறுத்துள்ளது.