தமிழகத்தில் புதிதாக உருவாகும் மாவட்டங்கள்.!

website post (86)

கோரிக்கை

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று பொதுப்பணித் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று வருகிறது. விவாதத்தில் புதிதாக 8 மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என எம்எல்ஏ மற்றும் எம்பிக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அமைச்சர் விளக்கம்

அதற்கு பதிலளித்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், 8 மாவட்டங்களை உருவாக்குவதற்கு சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். 8 மாவட்டங்களை பிரிப்பது தொடர்பான கோரிக்கை அரசின் பரிசீலனையில் உள்ளது. முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். புதிய மாவட்டம் என்ற கோரிக்கைக்கு நிதிநிலைக்கு ஏற்ப முதல்வர் முடிவெடுப்பார் என்று தெரிவித்தார்.

தற்போதைய மாவட்டங்களின் எண்ணிக்கை

ஏற்கனவே, தமிழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு அரசின் நிர்வாக காரணங்களுக்காக பெரிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு திருப்பத்தூர், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, செங்கல்பட்டு, தென்காசி, கள்ளக்குறிச்சி என புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது. இதனையடுத்து தமிழகத்தில் மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்தது.

புதிதாக 8 மாவட்டங்கள்

அதன் தொடர்ச்சியாக தற்போது மீண்டும் தமிழகத்தில் மாவட்டங்களின் எண்ணிக்கை உயரவுள்ளது. அதாவது, கோவில்பட்டி, பழனி, கும்பகோணம், ஆரணி உள்ளிட்ட 8 மாவட்டங்களை புதிதாக உருவாக்கப்படவுள்ளது. புதிய மாவட்டங்கள் உருவாக்குவது குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அதனடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார். தற்போது மாவட்டத்தை பிரிப்பதற்கான ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். 

புதிதாக உருவாக்கப்பட்டால்..மொத்தம் எத்தனை?

தமிழ்நாட்டில் 32 மாவட்டங்கள் இருந்து வந்தநிலையில், கடந்த அதிமுக ஆட்சியில் 6 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு தற்போது தமிழகத்தில் 38 மாவட்டங்கள் இருக்கின்றன. இந்தநிலையில், இன்று அறிவிக்கப்பட்டபடி மேலும் 8 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டால் தமிழகத்தின் மொத்த மாவட்டங்கள் 46-ஆக அதிகரிக்கும்.