மாமன்னன் படத்திற்கு தடையில்லை.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!

maamannan

மாமன்னன் படத்திற்கு இடைக்கால தடைகோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. 

எதிர்ப்புகளை சந்தித்துவரும் மாமன்னன்

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் உருவாகியுள்ள மாமன்னன் திரைப்படம் நாளை ஜூன் 29-ம் தேதி வெளியாகிறது. இத்திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானதையடுத்து, பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின. ஒரு பக்கம் மாமன்னன் மற்றும் தேவர் மகன் என்ற விவாதம் கிளம்பியிருக்கக்கூடிய நிலையில், இன்னொரு பக்கம் உதயநிதி ஸ்டாலின் 'ஏஞ்சல்' திரைப்படத்தை முடித்து கொடுக்காமல் மாமன்னன் திரைப்படத்தை வெளியிட முடியாது என்ற விவாதம் எழுந்த நிலையில், அந்த வழக்கிற்கான உத்தரவை தற்போது வழங்கியிருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். 

இடைக்கால தடை விதிக்க வேண்டும்

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள மாமன்னன் திரைப்படத்திற்கு தடைவிதிக்க கோரி ஓ.டி.எஸ். பிலிம்ஸ் உரிமையாளர் ராமசரவணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஏஞ்சல் திரைப்படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாகவும், மீதமுள்ள 20 சதவீத படப்பிடிப்பிற்கு உதயநிதி ஸ்டாலின் கால்ஷீட் தராமல் புறக்கணிக்கிறார் என்று குற்றம் சாட்டப்பட்டது. 

மேலும், உதயநிதி ஸ்டாலின் மாமன்னன் தனக்கு கடைசி படம் என்று அறிவித்திருந்தநிலையில், இதுவரை ஏஞ்சல் படத்திற்கு 13 கோடி வரை செலவிட்டதாகவும் மாமன்னன் படத்தை வெளியிட்டால் தமக்கு இழப்பு ஏற்படும் என்றும், இதற்காக 25 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டுமென்றும், மாமன்னன் படத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் தெரிக்கப்பட்டிருந்தது. 

இடைக்கால தடை விதிக்க மறுப்பு

இந்தநிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஏஞ்சல் திரைப்படத்திற்கு வாய்மொழி ஒப்பந்தம் மட்டுமே போடப்பட்டது என்று ரெட் ஜெயண்ட் நிறுவனம் தரப்பில் வாதிடப்பட்டது. இறுதியில், மாமன்னன் திரைப்படத்திற்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்து, ஏஞ்சல் திரைப்படத்தில் நடத்து தருவது பற்றி பின்னர் உத்தரவிடப்படும் எனக்கூறி, மாமன்னன் படத்திற்கு தடைகோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.