அதிமுக அலுவலகத்தில் ஒரு லட்சம் ரூபாய் கொள்ளை..! 

AIADMK

சென்னை இராயபேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ரூ.1,00,000 கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மாவட்ட செயலாளர்கள் கூட்டம் 

அதிமுக தலைமை அலுவலகத்தில், சட்டமன்ற எதிக்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி அணியின் சார்பாக மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ள அதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.  இதில் தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், செய்தித் தொடர்பாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

 

இக்கூட்டத்தில் வரும் ஜனவரி 4ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள அதிமுக பொது செயலாளர் தொடர்பான வழக்கு, ஜனவரி 9 ஆம் தேதி தொடங்க உள்ள தமிழக சட்டப்பேரவை கூட்டம், எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரத்தில் சபாநாயகர் முடிவு எடுக்காதது ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் தென்காசி தெற்கு ஒன்றிய செயலாளர் உச்சிமாகாளி என்பவரும் கலந்துகொண்டார்.

ஒரு லட்சம் ரூபாய் திருட்டு

இக்கூட்டம் முடிந்து எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு செல்ல உள்ள நிலையில், அவரை பார்க்க நிர்வாகிகள் கூட்டம் அலைமோதியது, இந்த சமயத்தில் தென்காசி தெற்கு ஒன்றிய செயலாளர் உச்சிமாகாளி வைத்திருந்த ஒரு லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் இராயபேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த ஒரு லட்சம் ரூபாயும் 2000 ரூபாய் நோட்டுகளில் உச்சிமாகாளி வைத்திருந்ததாக காவல்நிலையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.