நாங்குநேரியில் பயங்கரம்.. வீடு புகுந்து அரிவாள் வெட்டு.. பள்ளி மாணவர்கள் செய்த சம்பவத்தால் அதிர்ந்த நெல்லை.! 

xcbvnh

நாங்குநேரியைச் சேர்ந்த பள்ளி மாணவன் மற்றும் அவரது சகோதரியை சக பள்ளி மாணவர்கள் வீடு புகுந்து வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   

சாதி ரீதியில் துன்புறுத்தல்

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் உள்ள பெருந்தெருவைச் சேர்ந்தவர்கள் முனியாண்டி-அம்பிகாபதி தம்பதி. கூலித் தொழிலாளிகளான இவர்களுக்கு 17 வயதில் சின்னதுரை என்ற மகனும், 14 வயதில் சந்திரா செல்வி என்ற மகளும் உள்ளனர். வள்ளியூரில் உள்ள அரசு பள்ளியில் இவர்கள் இருவரும் 12 ஆம் வகுப்பு மற்றும் 9 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். பள்ளியில் சக மாணவர்களுக்கிடையே ஜாதி ரீதியாக ஏற்பட்ட பிரச்னையில் சின்னத்துரை ஒரு வாரம் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 

ஆகஸ்ட் 9 ஆம் தேதி பள்ளி நிர்வாகத்தினர், சின்னதுரையின் பெற்றோரை தொடர்புகொண்டு மகனை பள்ளிக்கு அனுப்பி வைக்குமாறு தெரிவித்துள்ளனர். பள்ளிக்குச் சென்ற சின்னத்துரையிடம் பள்ளிக்கு வராதது குறித்து ஆசிரியர்கள் விசாரித்தபோது தன்னை சில மாணவர்கள் ஜாதி ரீதியாக கேலி, கிண்டல் செய்வதால் பள்ளிக்கு வர விரும்பவில்லை என சின்னதுரை ஆசிரியர்களிடம் கூறியுள்ளார்.

வீடு புகுந்து அரிவாள் வெட்டு

இதைகேட்ட ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட மாணவர்களை அழைத்து கண்டித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவர்கள் பள்ளி முடிந்த பின், சின்னதுரையை மடக்கி மிரட்டியுள்ளனர். பெற்றோர் கூலி வேலைக்குச் சென்றிருந்ததால் வீட்டிற்கு வந்த சின்னதுரையும், அவரது சகோதரி சந்திரா செல்வியும் வீட்டில் தனியாக இருந்ததாக தெரிகிறது. அப்போது வீட்டிற்குள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் புகுந்த அடையாளம் தெரியாத 6 பேர் கும்பல், சின்னதுரையை சரமாரியாக வெட்டினர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தங்கை சந்திரா செல்வி அவர்களை தடுக்க முயன்றபோது, அவருக்கும் கையில் வெட்டுக் காயம் ஏற்பட்டது.

உறவினர்கள் சாலை மறியல்

இருவரின் கூச்சல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்த நிலையில், அந்த கும்பல் தப்பியோடியது. பலத்த ரத்த காயங்களுடன் கீழே விழுந்து கிடந்த சின்னதுரை, சந்திரா செல்வி ஆகிய இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

பள்ளி மாணவ, மாணவியை வீடு புகுந்து வெட்டிய விவகாரத்தில், போலீசார் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி உயிரிழந்த கிருஷ்ணனின் உடலை சாலையில் வைத்து உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு

இந்த சம்பவங்கள் தொடர்பாக போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 4 பேர் உட்பட 6 சிறுவர்களுக்கு இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்பிருப்பது தெரிய வந்தது. அதனடிப்படையில் அவர்களை கைது செய்த போலீசார் 6 பேர் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் 6 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நெல்லையில் உள்ள சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். 

ஜி.வி.பிரகாஷ் கண்டனம்

இந்நிலையில், நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் குமார், சின்னத்துரைக்கு நடந்த கொடூர சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது, "தம்பி சின்னத்துரை விரைவில் குணமடைய வேண்டுகிறேன். சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விசம் பரவட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.