தொழிற்சாலைகள் திருத்த சட்ட மசோதா நிறைவேற்றம்.. திமுக கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு.!

xdgvc

2023-ம் ஆண்டு தொழிற்சாலைகள் திருத்த சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், திமுக கூட்டணி கட்சிகளான இடதுசாரி கட்சிகள் மற்றும் விசிக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.  

12 மணி நேரம் வேலை..

தமிழ்நாடு சட்டப்பேரவியில் 2023-ம் ஆண்டு தொழிற்சாலைகள் திருத்த சட்ட மசோதா இன்று நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்த மசோதாவில், தினசரி 12 மணி நேரம் என வாரத்தில் 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுப்பு என்ற முறையை இந்த சட்டம் கொண்டுள்ளது. இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரி கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். 

கட்டாயம் அல்ல

இந்த தொழிற்சாலைகள் திருத்த சட்டம் தொழிலாளர்களின் விருப்ப தேர்வாகவே இருக்கும் என்றும், இது கட்டாயம் அல்ல என்றும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆகியோர் விளக்கம் அளித்துள்ளனர். 

இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், தொழிற்சாலைகளில் நெகிழ்வுத்தன்மை வரவேண்டும் என்பதற்காக சட்டம் கொண்டு வரப்படுகிறது. மத்திய அரசு கொண்டு வந்ததற்காக இதை கொண்டு வரவில்லை, குறிப்பிட்ட சில தொழிலுக்கு மட்டுமே இது பொருந்தும். தொழிலாளர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படாத வகையில் சட்டம் அமல்படுத்தப்படும். வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீட்டிற்காக தமிழகத்தை நோக்கி வருகின்றன. எந்த தொழிலாளர்கள் விரும்புகிறார்களோ அவர்களுக்கு மட்டுமே இந்த சட்டம் பொருந்தும் என்று பேசினார்.

 திமுக கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு

தொழிற்சாலைகள் திருத்த சட்ட மசோதாவிற்கு சிஐடியூ தொழிற்சங்கத்தினர் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்தநிலையில், இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தொழிற்சாலைகள் திருத்த சட்ட மசோதா  நிறைவேற்றப்பட்டநிலையில், திமுக கூட்டணி கட்சிகளான இடதுசாரி கட்சிகள் மற்றும் விசிக வெளிநடப்பு செய்தனர்.