பேனா நினைவுச் சின்னம்.. மத்திய அரசு அனுமதி.. விரைவில் அடிக்கல் நாட்டு விழா?

PEN

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவாக பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

ஆதரவும்.. எதிர்ப்பும்..

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவாக சென்னை மெரினா கடற்கரையில் 81 கோடி ரூபாய் செலவில் பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. இந்த முடிவுக்கு மக்கள் தரப்பிலிருந்து ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியது. இதையடுத்து, மக்களிடத்தில் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தியது. மக்கள் பெரும்பாலோர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. மற்றும் ஒரு சில நாம் தமிழர் கட்சி மற்றும் இன்னும் ஒரு சில இயக்கங்கள் பேனா சிலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. 

மத்திய அரசு அனுமதி

இதையடுத்து, மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு ஒப்புதலுக்காக தமிழ்நாடு அரசு விண்ணப்பத்திருந்தது. இதை பரிசீலனை செய்து சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழு 15 நிபந்தனைகளுடன் ஒப்புதல் வழங்கியது. இதற்கு அடுத்தகட்டமாக, மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கவேண்டியிருந்தநிலையில், தற்போது அந்த ஆணையமும் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு விதித்த அதே 15 நிபந்தனைகளை விதித்து அனுமதி அளித்திருக்கிறது. 

15 நிபந்தனைகள்

ஐஎன்எஸ் அடையாறு கடற்படை தளத்தில் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். கட்டுமான பணிகளுக்காக எந்த ஒரு நிலையிலும் நிலத்தடி நீரை பயன்படுத்தக் கூடாது. திட்டத்தை செயல்படுத்தும்போது நிபுணர் கண்காணிப்புக்குழு அமைத்து கண்காணிக்க வேண்டும். அவசரகால மீட்புப் பணி தொடர்பான விரிவான திட்டம் தீட்டப்பட வேண்டும். ஆமை இனப்பெருக்க காலத்தில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள கூடாது உள்ளிட்ட 15 நிபந்தனைகளை விதித்து அனுமதி வழங்கியிருக்கிறது. 

விரைவில் அடிக்கல் நாட்டு விழா?

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பேனா நினைவுச் சின்னம் சென்னை மெரினா கடற்கரையில் அமைப்பதற்கான அனைத்து அனுமதிகளையும் பெற்ற நிலையில், விரைவில் அதற்கான அடிக்கல் மற்றும் கட்டுமானத்திற்க்கான டெண்டர் உள்ளிட்ட வேலைகளை தமிழ்நாடு அரசு விரைவில் மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.