பாமகவால் தான் அதிமுக உயிர் பெற்றது - ஜெயக்குமாருக்கு பதிலடி கொடுத்த பாமக வழக்கறிஞர்

pmk balu

ஜெயக்குமார் பாமக மீது விமர்சனங்கள் வைக்கும் போது சற்று கவனமாக வைக்கவேண்டும் என்று பாமக வழக்கறிஞர் பாலு பேட்டியளித்தார். 

ஜெயக்குமார் விமர்சனம்

கடந்த சில தினங்களுக்கு முன் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், 1988 ஆம் ஆண்டு பாமகவிற்கு தாங்கள் தான் இடம் கொடுத்தோம். அன்புமணி ராமதாஸ் நாடாளுமன்ற உறுப்பினரானதற்கு நாங்கள் தான் கரணம் என்றும் கூறியிருந்தார். இது பாமகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், பாமகவின் வழக்கறிஞர் பாலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிமுக பிளவுபட வேண்டும் என்பதற்காகவே ஜெயக்குமார் தன்னை தயாரித்து வந்துள்ளது போல், அவரின் பேச்சுகள் உள்ளதாக கூறியுள்ளார். அதிமுகவுடனான தேர்தல் ஒப்பந்தத்தின்படியே ,பாமகவிற்கு இடம் வழங்கப்பட்டதாகவும், இதனையடுத்து நடந்த பொதுக்கூட்டத்தில் ஆலோசனை மேற்கொண்டு அன்புமணியை வேட்பாளராக அறிவித்ததாகவும் தெரிவித்துள்ளார்.  

அதிமுகவுக்கு உயிர் கொடுத்த பாமக

தொடர்ந்து பேசிய பாலு, 1996 ஐ ஜெயக்குமார் சற்று திரும்பிப் பார்க்க வேண்டும். 1996 தேர்தலில் அதிமுக பெற்ற எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை, 4. பாமக தனித்து நின்று பெற்ற எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 4. அதிமுக பலவீனமடைந்தபோது, மறைந்த ஜெயலலிதா அவர்கள் எங்களிடம் கூட்டணி வைத்தபோது தான் அவர்கள் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்றனர். அதிமுக பலவீனமடையும் நேரங்களில் பாமக உயிர் கொடுத்தது. 

காத்துக்கிடந்த ஜெயலலிதா

அதேபோல, 2001 தேர்தலின் போது எங்களிடம் கூட்டணி வைப்பதற்காக ஜெயலலிதா அவர்கள் வழி மேல் விழி வைத்து காத்திருந்தார். நாங்கள் எப்போதும் எங்களால் தான் ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்தார். எங்களால் தான் எடப்பாடி பழனிச்சாமி இரண்டாண்டுகள் முதல் அமைச்சராக இருந்தார், ஜெயக்குமார் அமைச்சராக இருந்ததற்கு பாமக தான் காரணம் என்று நாங்கள் ஒருபோதும் சொன்னதில்லை. ஆனால் ஜெயக்குமார் பாமக மீது விமர்சனங்கள் வைக்கும் போது சற்று கவனமாக வைக்கவேண்டும். ஜெயக்குமார் கூறியதை அவரது தனிப்பட்ட கருத்தாக பார்க்கிறோம். ஜெயக்குமாரின் கருத்து குறித்து எடப்பாடி பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும். அவரின் இந்த கருத்தானது அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.