ஆதாரத்தை விரைவில் வெளியிடுவேன் - பழ.நெடுமாறன்

pazha.nedumaran

மதுரையில் தமிழ்நாடு முற்போக்கு பெண் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் இன்று (மார்ச்-04) உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் பங்கேற்றிருந்தார்.

நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த பழ.நெடுமாறன், பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று நான் கூறியதற்கு யாரும் உடன்படவில்லை என்று சொல்வது மிகவும் தவறானது. பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்று நான் கூறியது, ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் புதிய நம்பிக்கையும், உற்சாகத்தையும் கொடுத்துள்ளது.

பிரபாகரன் உயிருடன் இருப்பதற்கான ஆதாரம் கிடைத்தவுடன், அதனை ஊடகத்தினர் முன்பாக வெளியிடுவேன். பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற தகவலை கூறிய பின்னர் மக்கள் ஆதரவு அதிகமாக கிடைத்துள்ளது என்று தெரிவித்தார்.

இவர் கடந்த பிப்ரவரி மாதம், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருப்பதாக, தஞ்சாவூரில் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்திருந்தநிலையில், இந்தியா, இலங்கை மட்டுமல்லாது உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. இவர் தெரிவித்ததையடுத்து, பல்வேறு தரப்பிலிருந்து ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் தற்போது, பிரபாகரன் உயிருடன் இருப்பதற்கான ஆதாரம் கிடைத்தவுடன் ஊடகம் முன்பு வெளியிடுவேன் என தெரிவித்திருக்கிறார். தற்போதைய இந்த அறிவிப்பு அரசியல் களத்தில் சூடுபிடித்திருக்கிறது.