குடியரசுத் தலைவர் வருகை

ஐந்தடுக்கு பாதுகாப்பில் மீனாட்சி அம்மன் கோவில்.!

Draupathi murmu

புதுடெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு இன்று(பிப்-18) காலை 11.40 மணிக்கு திரெளபதி முர்மு வருகிறார். அவரை ஆளுநர் ஆர்.என். ரவி வரவேற்கிறார். பின்னர், 11.50 மணிக்கு விமான நிலையத்திலிருந்து காரில் கீழச் சித்திரை வீதிக்கு நண்பகல் 12.15 மணிக்கு வருகிறார். அம்மன் சந்நிதி நுழைவு வாயிலில் அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதன் பின்னர், மீனாட்சி அம்மனையும், சுந்தரேசுவரரையும் தரிசனம் செய்கிறார். கோயிலை சுற்றிப் பார்த்துவிட்டு 12.45 மணிக்கு காரில் புறப்பட்டு அழகர்கோவில் சாலையிலுள்ள அரசு சுற்றுலா மாளிகைக்குச் செல்கிறார். அங்கு மதிய உணவுக்குப் பின்பு கோரிப்பாளையம், கீழவாசல் வழியாக விமான நிலையம் சென்றடைகிறார். பின்னர் 2.10 மணிக்கு தனி விமானம் மூலம் கோவைக்கு புறப்பட்டுச் செல்கிறார்.

 

குடியரசுத் தலைவர் வருகையையொட்டி மதுரையில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விமான நிலையம், மீனாட்சி அம்மன் கோவில் பகுதி, காரில் செல்லும் வழித்தடப் பகுதிகளில் இரண்டாயிரத்திற்க்கும் மேற்பட்ட போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவிலைச் சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மதுரையிலிருந்து கோவை செல்லும் குடியரசுத் தலைவர், மாலை 5.45 மணிக்கு ஈஷா மையத்தை சென்றடைகிறார். மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்ட பின்னர், இரவு 8.30 மணிக்கு ஈஷா மையத்திலிருந்து கார் மூலம் அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்று இரவு ஓய்வெடுக்கிறார். 

நாளை காலை கோவை விமான நிலையத்திலிருந்து இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் நீலகிரி மாவட்டம் வெலிங்டனுக்கு செல்கிறார். காலை 10.10 மணிக்கு முப்படை பயிற்சிக் கல்லூரி வளாகத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். நிகழ்ச்சி முடிந்த பிறகு, ஹெலிகாப்டர் மூலம் கோவை வரும் குடியரசுத் தலைவர் பகல் 12.25 மணிக்கு டெல்லி செல்கிறார்.