தமிழ்நாட்டில் பிரதமர் மித்ரா பார்க்.. பிரதமருக்கு முதலமைச்சர் நன்றி கடிதம்.!

pm

பிரதமர் ட்விட்

பிரதமர் மித்ரா மெகா ஜவுளிப் பூங்காக்கள் ஜவுளித் துறையை மேம்படுத்தும். தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், ம.பி மற்றும் உ.பி.யில் பிரதமர் மித்ரா மெகா ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கப்படும் என்ற செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மித்ரா மெகா ஜவுளிப் பூங்காக்கள் 5F (Farm to Fibre to Factory to Fashion to Foreign - பண்ணை முதல் ஃபைபர் முதல் ஃபேக்டரி முதல் ஃபேஷன் முதல் வெளிநாட்டு வரை) என்ற அளவுகோலில் ஜவுளித் துறையை மேம்படுத்தும். தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் PM MITRA மெகா ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு

மத்திய அமைச்சரவை அனுமதியளித்திருந்த நிலையில், இந்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தத் திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ.4,445 கோடி செலவிடப்படும். அதன் கீழ் 7 மெகா ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடை தயாரிப்பு (பிஎம் மித்ரா) பூங்காக்கள் அமைக்கப்படும். இதன் மூலம் 7 ​​லட்சம் பேருக்கு நேரடியாகவும், 14 லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும். இது தனியார் - மத்திய அரசு கூட்டமைப்பில்  அமைக்கப்படும் என்று அரசு ஏற்கனவே தெரிவித்து இருந்தது. 

முதலமைச்சர் நன்றி கடிதம்

இந்நிலையில், பிரதமர் மித்ரா பூங்காவிற்கு தமிழகத்தை தேர்வு செய்ததற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடி மற்றும் மத்திய தொழில் மற்றும் வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயல் அவர்களுக்கும் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், பிரதமர் மித்ரா பூங்காவிற்கு தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தை தேர்வு செய்ததற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இது தென் தமிழ்நாட்டின் ஜவுளித் துறைக்கு ஒரு பெரிய ஊக்கமாக இருக்கும். எங்கள் சிப்காட்-க்கு 1052 ஏக்கர் நிலம் உள்ளது மற்றும் எங்கள் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தை செயல்படுத்த தயாராக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

தொழில்துறை அமைச்சர் ட்விட்

மேலும், இதற்கு தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் பிரதமர் மோடி அவர்களுக்கும், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் அவர்களுக்கும், முதலமைச்சர் அவர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்; விருதுநகர் மாவட்டத்தில் PM MITRA பூங்கா அமைக்க தமிழகத்தை தேர்வு செய்த மாண்புமிகு பிரதமர், மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் மாண்புமிகு மத்திய ஜவுளித்துறை அமைச்சர் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பூங்காவால் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் பயன்பெறும். சிப்காட் செயல்படுத்த 1052 ஏக்கர் நிலம் உள்ளது என தெரிவித்துள்ளார்.