ஆங்கிலம் இருக்கக்கூடாது என்பதே பாஜகவினரின் நோக்கம் - கடுமையாக சாடிய ராகுல்காந்தி

ragul gandhi

காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி மத்திய அரசுக்கு எதிராக இந்தியா முழுவதும் ஒற்றுமைப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இந்த ஒற்றுமை பயணத்தை தமிழ்கத்தில் தொடங்கிய ராகுல்காந்தி இந்தியாவின் பலவேறு மாநிலங்களில் தனது நடை பயணத்தை தொடர்ந்து வருகிறார். தற்போது ராஜஸ்தானில் பாதயாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி நேற்று ஆல்வாரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பா.ஜனதா தலைவர்கள் ஆங்கிலத்துக்கு எதிராக பேசுவதாக குற்றம் சாட்டியுள்ளார். 

பாஜக தலைவர்களின் பிள்ளைகள் எங்கே படிக்கிறார்கள்..?

மேலும், பேசிய அவர், பா.ஜனதாவில் எங்களை எதிர்க்கும் தலைவர்கள், எங்கே சென்றாலும் ஆங்கிலத்துக்கு எதிராக பேசுகிறார்கள். பள்ளிகளில் ஆங்கிலம் இருக்கக்கூடாது என்கிறார்கள். பெங்காலி இருக்கலாம், இந்தி இருக்கலாம், ஆனால் ஆங்கிலம் இருக்கக்கூடாது என்பதே அவர்களின் நோக்கம்'. இந்த தலைவர்களிடம் அவர்களின் பிள்ளைகள் எங்கே படிக்கிறார்கள்? என கேட்டுப்பாருங்கள். அமித்ஷா முதல் பா.ஜனதா முதல்-மந்திரிகள், எம்.பி-எம்.எல்.ஏ.க்களின் குழந்தைகள் அனைவரும் ஆங்கில வழிக்கல்வி பள்ளிகளில் படிக்கிறார்கள் என விமர்சித்துள்ளார்.

இந்தி பயன்படாது

மேலும், 'மாணவர்கள் இந்தி படிக்க வேண்டாம் என நான் கூறவில்லை. நீங்கள் இந்தி, தமிழ் என அனைத்து இந்திய மொழிகளையும் படிக்க வேண்டும். ஆனால் அமெரிக்கா, ஜப்பான் அல்லது இங்கிலாந்து என வெளிநாட்டினருடன் நீங்கள் பேசவேண்டுமென்றால் இந்தி பயன்படாது, ஆங்கிலம்தான் பயன்படும். உலகோடு போட்டிபோட இந்தி உதவாது ஆங்கிலம் கற்றுக் கொள்ளுங்கள் எனவே ஏழைகளின் குழந்தைகளும் ஆங்கிலம் கற்று அமெரிக்கா சென்று அங்குள்ளவர்களுடன் போட்டிபோட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்' என்றும் தெரிவித்தார். அவரின் இந்த கருத்து பாஜகவினரிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.