அரசு நிலம் ஆக்கிரமிப்பு
திருச்சி மாவட்டம் சமயபுரம் சந்தை கேட் பகுதியில் உள்ள வார சந்தை நுழைவாயில் உள்ள பேரூராட்சிக்கு சொந்தமான 90 சதுர அடியில் திருப்பதி என்ற பெயரில் ஹோட்டல் செயல்பட்டு வந்தது. இந்த ஹோட்டல் வார சந்தை நுழைவாயில் ஆக்கிரமிப்பு கட்டப்பட்டுள்ளதாக மதுரை உயர்நீதிமன்றத்தில் பேரூராட்சி சார்பில் கடந்த ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை செய்து உயர்நீதிமன்றம் பேரூராட்சிக்கு உத்தரவு ஒன்று பிறப்பித்துள்ளது. நீதிமன்ற உத்திரவின் பெயரில் பேரூராட்சி செயல் அலுவலர் சந்திரகுமார் ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு ஹோட்டலை இடிக்க முற்பட்டனர். அப்போது பேரூராட்சி அதிகாரிகளிடம் ஹோட்டல் உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் .
அதிகாரிகளுடன் வாக்குவாதம்
பின்னர் மண்ணச்சநல்லூர் வட்டாட்சியருக்கு தெரியப்படுத்தியவுடன் வட்டாட்சியர் அருள்ஜோதி சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர் நீதிமன்ற உத்தரவை பார்த்தவுடன் கண்டிப்பாக இடித்து தான் ஆக வேண்டும் என உத்தரவின் பேரில் திருப்பதி ஹோட்டலை ஜேசிபி எந்திரம் மூலமாக இடித்தனர். வேறு ஏதும் அசம்பாவிதம் நடந்துவிட கூடாது என்பதற்காக சமயபுரம் காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
பின்னர் ஹோட்டல் உரிமையாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது; கடந்த 30 ஆண்டுகளாக ஹோட்டல் வைத்து எனது பிழைப்பை நடத்தி வருகிறேன். பேரூராட்சி நிர்வாகம் எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென நான் வைத்திருக்கும் ஹோட்டலை இடித்து வருகிறார்கள் இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.