திருப்பூர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் கொள்ளை முயற்சி - கோயிலுக்குள் பதுங்கியிருந்த திருடன் 

robbery attempt at tirupur

பிரசித்தி பெற்ற அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில்

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் பிரசித்தி பெற்று விளங்கும் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பகதர்கள் வருகை தந்து வழிபாடு நடத்துவது வழக்கம்.  வழக்கம் போல் அதிகாலை நேரத்தில் கோவில் அர்ச்சகர்கள் நடை திறந்த பொழுது கோவிலில் உள்ளே பொருட்கள் சிதறி கிடந்ததும், கோவிலுக்குள் உள்ள இரண்டு உண்டியல்களை உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் தெற்கு உள்பிரகார வளாகத்தில் 63 நாயன்மார்கள் உள்ள கோபுரங்களின் கலசம் உடைக்கப்பட்டதுடன் சிலைகள் மீது அணிவித்துள்ள துணிகள் மற்றும் பொருட்கள் களைந்த நிலையில், திருட்டு முயற்சி நடந்திருப்பதை அறிந்து கோவில் நிர்வாகத்தினர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். 

கோவிலுக்குள் ஒளிந்த திருடன்

இந்த தகவலில் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த துணை கண்காணிப்பாளர் பவுல்ராஜ் தலைமையிலான காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டு வந்தனர். அப்போது, கோயில் பெரிய கோபுரம் நிலை பகுதியில் ஒருவன் ஒளிந்திருப்பதை கண்டு காவல்துறையினர் அவனை பிடித்து விசாரித்தனர். அப்போது, பிடிபட்டவன் வெள்ளமடை பகுதியைச் சேர்ந்த சரவண பாரதி (32) என்பதும், இன்று அதிகாலை 4 மணிக்கு அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலுக்குள் கொள்ளை முயற்சியில் ஈடுபட வந்ததும் தெரியவந்தது. அவனிடமிருந்து, வெண்கலத்தால் செய்யப்பட்ட வேல், சேவல் கொடியுள்ள இரண்டு வேல்கள் மற்றும் உபகாரப்பொருட்களை பறிமுதல் செய்தனர். 

பக்தர்கள் ஏமாற்றம்

இதனையடுத்து அவனை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து இந்து அமைப்பினர் கோயில் முன்பு முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவத்தால் இன்று கோயிலில் கால பூஜைகள் ஏதும் நடைபெறாததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.