சுதந்திர தினத்திலும் சக்கைபோடு போடும் மது விற்பனை - அவல நிலையை கண்டு பொதுமக்கள் குமுறல்

thiruppur tasmac

கூடுதல் விலைக்கு மதுபானம்

சுதந்திர தின விழா நாளான இன்று டாஸ்மாக் மதுபானக் கடைகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு பக்கம் சுதந்திர தின கொண்டாட்டம் கோலாகலமாக நடந்து வரும் நிலையில், திருப்பூர் மதுபானக் கூடங்களில் இலவச சைடு டிஷ் உடன் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்பட்டு வருகிறது. குறிப்பாக திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு மாநகர பகுதிகளில் உள்ள மதுக்கடைகளை ஒட்டி உள்ள மதுபானக் கூடங்களில் ரெகுலராகவே காலை நேரங்களில் டாஸ்மாக் திறப்பதற்கு முன்பாகவும், இரவு நேரங்களில்  மதுக்கடைகள் பூட்டப்பட்ட பிறகும் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக புகார்கள் தெரிவிக்கப்படுகின்றது. 

இலவச சைட் டிஷ்

சுதந்திர தின நாளான இன்று, தமிழ்நாடு அரசு மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளித்துள்ள நிலையில், திருப்பூர் மாநகரில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளிலும் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்கப்படுகிறது.  திருப்பூர் லட்சுமி நகரில் உள்ள 1985 எண் கொண்ட மதுபானக் கடையின் பார், பின்னி காம்பவுண்டில் உள்ள 1951 எண்ணிட்ட மதுபானக் கடையின் பார் மற்றும் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள 1990ம் எண்ணிட்ட மதுபானக் கடையின் பார் ஆகிய இடங்களிலும் சுதந்திர தின விடுமுறை நாளான இன்று மது விற்பனை கோலாகலமாக நடந்தது. இந்த மது விற்பனை செய்த கடைக்காரர்கள் குடிமகன்களை குதூகலமடைய செய்ய இலவசமாக டம்ளர், சைடு டிஷ்சாக மிக்சர், முறுக்கு, பொரி கடலை மற்றும் ஃப்ரூட்ஸ் ஆகியவையும் வழங்கப்பட்டு வியாபாரம் களை கட்டியது. சுதந்திர தின கோலாகலத்தில் இலவசமாக சைடு டிஷ் வழங்கி குதூகலமைடைய செய்த மதுபானக் கூட உரிமையாளர்களுக்கு திருப்பூர் போலீசார் மறைமுக அனுமதி வழங்கியிருப்பதும், இதனால் சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாடும் வேளையில், மதுபானக் கடை பார்களில் இலவச சைடு டிஷ் உடன் குடிமகன்கள் பார்களில் கூடி குதூகலித்த கேவலமான நிலை திருப்பூர் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.