தமிழ் வழி பாடப்பிரிவுகள் தற்காலிக நீக்கம்.. அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி.!

tamil

அண்ணா பல்கலைகழக உறுப்பு கல்லூரிகளில் தமிழ் மொழியில் செயல்பட்டு வரும் மெக்கானிக்கல் மற்றும் சிவில் பாடப் பிரிவுகள் நீக்கப்படுவதாகவும், இது வரும் கல்வி ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.  

பொறியியல் படிப்புகளில் தமிழ் வழியிலும் படிப்பதற்கு முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது நடவடிக்கை எடுக்கப்பட்டது. முதலில் அண்ணா பல்கலைக்கழக வளாகக் கல்லூரிகளில் சிவில், மெக்கானிக்கல் உள்ளிட்ட சில  பாடப்பிரிவுகளில் தமிழ் மொழியில் வழங்கப்பட்டன. இதனையடுத்து, பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளிலும் இந்த நடைமுறை அமலுக்கு வந்தது.

தமிழகம் முழுவதும் 16 கல்லூரிகள், பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளாக இயங்கி வருகின்றன. என்றாலும், மாணவர்கள் மத்தியில் தமிழ் வழியில் பயில்வதற்கான போதிய ஆர்வம் இல்லாமல் இருந்து வந்தது. இந்தநிலையில், தமிழ்நாட்டில் உள்ள 11 உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் தற்காலிகமாக மூடப்படுகிறது, மாணவர் சேர்க்கை நடத்தப்படாது என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருக்கிறது. 

அதன்படி, ஆரணி, திண்டிவனம், விழுப்புரம், திண்டுக்கல், இராமநாதபுரம், அரியலூர், பண்ருட்டி, பட்டுக்கோட்டை, உள்ளிட்ட 11 இடங்களில் இருக்கக்கூடிய அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் மெக்கானிக்கல் மற்றும் சிவில் படிப்புகளில் நடத்தப்பட்டு வந்த தமிழ் வழி பாடப்பிரிவுகள் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவித்திருக்கிறது.

எனவே, வரக்கூடிய கல்வியாண்டில், மேற்குறிப்பிட்ட கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் நடத்தப்படாது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், 6 உறுப்பு கல்லூரிகளில் ஆங்கில வழி சிவில் மற்றும் மெக்கானிக்கல் பாடப்பிரிவுகள் நீக்கம் செய்யப்படுவதாகவும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.