தேசிய போட்டிகளில் தமிழக மாணவர்கள் பங்கேற்காத விவகாரம் - கடுமையாக சாடிய பழனிசாமி

eps

பள்ளி மாணவர்களுக்கு தேசிய அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் தமிழக மாணவர்கள் பங்கேற்காததை அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

வாய்ப்புகளை இழந்த தமிழக மாணவர்கள்

School Games Federation of India, பள்ளி மாணாக்கர்களுக்காக வருடந்தோறும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது வழக்கம், இதில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு வழங்கப்படும் Form-4 சான்றிதழ்கள் விளையாட்டு வீரர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிப்பதுடன், தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கு பெறவும் வாய்ப்பாக அமையும். இந்நிலையில் கடந்த ஆண்டு SGFI 301மாணவர்களுக்கு வாய்ப்பளித்து அனுப்பிய அறிக்கையை இந்த விடியா திமுக அரசு முறையாக கையாளாமல் பாராமுகமாக இருந்ததன் விளைவாக இன்றைக்கு தமிழக மாணவர்கள் விளையாட்டுத் துறையில் தங்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகளை இழந்து தவிக்கின்றனர். 

மாணவர்களின் எதிர்காலம் கேள்விக் குறி

அயராத உறுதியாலும் உழைப்பாலும் தாங்கள் சார்ந்துள்ள விளையாட்டிற்காக தங்களை முழுமையாக கட்டமைத்துக் கொண்டு, தயார் செய்திருந்த மாணவர்களின் எதிர்காலம் இந்த அரசின் மெத்தனப் போக்கால் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது? தனது நிர்வாகத் திறமையின்மையால் விளையாட்டுத் துறையில் தமிழக மாணவர்களுக்கு முறையாக கிடைக்க வேண்டிய வாய்ப்பை கிடைக்கவிடாமல் செய்த இந்த கையாளாகாத அரசை வன்மையாகக் கண்டிப்பதுடன், இதற்கு காரணமான பள்ளி கல்வித்துறை அமைச்சரும், விளையாட்டுத்துறை அமைச்சரும் இனிவரும் காலங்களிலாவது  தங்கள் துறை சார்ந்த பணிகளில் உரிய கவனம் செலுத்த வேண்டுமென வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.