சிவகங்கை பெட்ரோல் குண்டு வீச்சில் உயிரிழந்த டாஸ்மாக் பணியாளர்.. முதலமைச்சர் உத்தரவு.!

website post (93)

கடந்த மார்ச் 3-ம் தேதி சிவகங்கை மாவட்டத்தில் நிகழ்ந்த பெட்ரோல் பாட்டில் வீச்சு சம்பவத்தில், நேற்று இரவு உயிரிழந்த டாஸ்மாக் நிறுவனப் பணியாளர் அர்ஜுனன் குடும்பத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

என்ன நடந்தது

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பள்ளத்தூர் கடை வீதியில் உள்ள அரசு டாஸ்மாக் மதுவிற்பனை கடை ஒன்று இயங்கி வருகிறது. இதில் விற்பனையாளராக அர்ஜுனன் (46) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 3-ம் தேதி இரவு கடையின் கதவை பாதியளவு அடைத்துவிட்டு மது விற்பனை சம்பந்தமான கணக்குகளை சரி பார்த்து கொண்டிருந்தார்.

அப்போது கடை முன் வந்த பள்ளத்தூர் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்ற வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் குண்டை கடைக்குள் வீசியிருக்கிறார். இதில் மூன்று அட்டைப்பெட்டியில் மது பாட்டில்கள் தீப்பிடித்து எரிந்து சேதமானது. அத்துடன் ரூ.76,880 பணமும் எரிந்து சேதமானது. இந்த சம்பவத்தில் பணியில் இருந்த அர்ஜூனன் மீதும் தீ பற்றியது. உடலில் 60% தீ காயங்களுடன் மீட்கப்பட்ட அவர் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் நேற்று இரவு சிகிச்சை பலன்றி உயிரிழந்துள்ளார். 

முதல்வர் உத்தரவு

இந்நிலையில், அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.10 லட்சம் மற்றும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் வேலையும் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;

சிவகங்கை மாவட்டம், பள்ளத்தூரில் கடந்த ( மார்ச்- 3 ) அன்று நிகழ்ந்த பெட்ரோல் பாட்டில் வீச்சு சம்பவத்தில் டாஸ்மாக் நிறுவனப் பணியாளர் அர்ஜுனன் (வயது 46) என்பவர் தீக்காயம் அடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இச்சம்பவம் நடைபெற்றவுடன் டாஸ்மாக் நிறுவனம், உடனடியாக மூன்று இலட்சம் ரூபாயினை நிதியுதவியாக அர்ஜுனன் குடும்பத்தினருக்கு வழங்கி, அனைத்து மருத்துவச் செலவுகளையும் ஏற்று அவருக்கு உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரச் செய்தியைக் கேட்டு மிகவும் வேதனையுற்றேன்‌.

அர்ஜுனனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10 இலட்சம் வழங்கிடவும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடையவரை காவல் துறையினர் கைது செய்து, வழக்கு பதிவு செய்து உரிய மேல்நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்று அறிக்கையில் அவர் தெரிவித்திருக்கிறார்.