ரயில் தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்தது வேதனையை தருகிறது - டிடிவி தினகரன்

TTV dinakaran

ரயிலில் ஏற்பட்ட தீ விபத்து

மதுரை வந்திருந்த பயணிகளின் ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் வேதனையை தருவதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;  உத்திரப்பிரதேசத்திலிருந்து தென்னிந்தியாவில் ஆன்மீக சுற்றுலா மேற்கொள்ள மதுரை வந்திருந்த பயணிகளின் ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் வேதனையை தருகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். 

கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்

விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பயணிகள் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். ரயிலில் தீப்பிடிக்க கூடிய பொருட்களை ஏற்றி செல்ல அனுமதி இல்லாத நிலையில் விதிமுறைகளை மீறி சிலிண்டர் எடுத்துச் சென்றதே இந்த விபத்திற்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இனி வரும் காலங்களில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ரயில்வே துறை உரிய கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன். என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.