அமலாக்கத்துறையினர் காவல்துறை அதிகாரிகள் இல்லை.. செந்தில் பாலாஜி வழக்கு தொடர்பான விசாரணையில் வழக்கறிஞர் கபில் சிபல் வாதம்.!

senthi

செந்தில் பாலாஜி தொடர்பான ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையில் அமலாக்கத்துறையினர் காவல்துறை அதிகாரிகள் இல்லை என செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் வாதிட்டு வருகிறார். 

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி பணபரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கூறி கடந்த ஜூன் 14-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்து நீதிமன்றக் காவலில் இருந்து வந்தார். அப்போது அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக சென்னை அரசு ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், உயர் சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது மருத்துவக்குழு கண்காணிப்பில் இருந்து வருகிறார். 

3-வது நீதிபதி தலைமையில் விசாரணை 

செந்தில் பாலாஜி மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு வழக்கில், செந்தில் பாலாஜியை விடுவிக்க வேண்டும் என்று ஒரு நீதிபதியும், நீதிமன்ற காவல் சட்டவிரோதமில்லை என  மற்றொரு நீதிபதியும் மாறுபட்ட தீர்ப்பை கடந்த 06-ம் தேதி வழங்கியநிலையில்,  3-வது நீதிபதியாக நீதிபதி  கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார். 3-வது நீதிபதி தலைமையில் ஏற்கனவே விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணையில் அமலாக்கத்துறை தரப்பிலிருந்து வழக்கறிஞர் துஷார் மேத்தாவும், செந்தில் பாலாஜி மனைவி தரப்பிலிருந்து வழக்கறிஞர் கபில் சிபல் வாதிட்டு வருகின்றனர். 

அமலாக்கத்துறையினர் காவல்துறை அதிகாரிகள் இல்லை

இந்தநிலையில்,  செந்தில் பாலாஜி தொடர்பான ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை இன்று ஜூலை 14  தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்கியிருக்கிறது. விசாரணையில்  இருதரப்பிலிருந்தும் வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டப்படி,  அமலாக்கத்துறையினர் காவல்துறை அதிகாரிகள் இல்லை என மேகலா தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் வாதத்தை முன்வைத்தார். அனைத்து ஆதாரத்தையும் சேகரித்த பின்பே ஆதாரத்தின் அடிப்படையில் நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்ய முடியும். 

வழக்கறிஞர் துஷார் மேத்தா மாறாக வாதிடுகிறார்

சோதனை நடத்த, பறிமுதல் செய்ய, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்ப அதிகாரம் உள்ளது. அமலாக்கத்துறையின் அதிகாரம் தொடர்பாக வழக்கறிஞர் துஷார் மேத்தா முரணான வாதம் செய்துள்ளார். அமலாக்கத்துறைக்கு காவல்துறையினரின் அதிகாரம் இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் துஷார் மேத்தா வாதிட்டுள்ளார். ஆனால் உயர்நீதிமன்றத்தில் அதற்கு மாறாக அமலாக்கத்துறை வழக்கறிஞர் துஷார் மேத்தா தற்போது வாதிடுகிறார் என்று கபில் சிபல் தெரிவித்தார்.